திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தூக்கிய விஜய்.. தவெகவில் இணைய பனையூர் அலுவலகம் வந்த விபி கலைராஜன்
சென்னை: முன்னாள் எம்எல்ஏவும், திமுக இலக்கிய அணி செயலாளருமான வி.பி.கலைராஜன் தவெகவில் இணைகிறார். தவெகவில் இணைவதற்காக அவர் பனையூர் அலுவலகம் வந்துள்ளார். தி.நகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் விபி கலைராஜன்.
அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வி.பி.கலைராஜன். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தி.நகர் தொகுதியில் தொடர்ந்து ஜெயித்து வந்த அவர் அதிமுகவில் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும், பிரச்சாரக் களங்களிலும் இப்போதும் ஒலிக்கும் "பூமி உள்ள வரை எங்க அம்மா புகழே நிலைத்திருக்கும்" என ஜெயலலிதாவை புகழ்ந்துரைக்கும் பாடலை எழுதியவர் வி.பி.கலைராஜன்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்றார். அதன் பிறகு தினகரனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவுக்கு தாவினார் வி.பி.கலைராஜன். தி.மு.க.வில் அவர் இலக்கிய அணி செயலாளராக உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தனக்கு தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் மாவட்டச் செயலாளரான ஜெ.அன்பழகன் மறைவு காரணமாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரது சகோதரரான பகுதிச் செயலாளர் ஜெ.கருணாநிதிக்கு தியாகராய நகரில் சீட் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வி.பி.கலைராஜன் வேறு ஏதாவது முக்கிய பதவி திமுகவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. 2026 சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அப்போதும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்து வந்த தனக்கு திமுகவில் உரிய இடம் கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த விபி கலைராஜன் தற்போது, தவெகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக, பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்து சென்றுள்ளார் வி.பி.கலைராஜன்.












Click it and Unblock the Notifications