ரூ.50 ஆயிரம் அபராதம்.. அமித்ஷா – ஜெய்சங்கர் அமைச்சரவை அதிகாரிக்கு சென்னை நீதிமன்றம் கொடுத்த ஷாக்
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை - இந்தியா இடையே நடந்த கடித விவரங்களை தெரிவிக்காததால் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உள்துறை மற்றும் ஜெய்சங்கரின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிடப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் இலங்கைக்கு கடல் வழியாக ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 720 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு மே 18 ம் தேதி ஜாகீர் உசேனை குற்றவாளி என்று அறிவித்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிறகு இந்தியா - இலங்கை இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜாகீர் உசேன் நாடு கடத்தப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை காலம் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு 2022 செப்டம்பர் 21ம் தேதியுடன் நிறைவு பெறும்.
ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் ஜாகீர் உசேனின் மகன் முகமது சமீர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம், ''இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஜாகீர் உசேன் வழக்கில் 2022 செப்டம்பர் 21ம் தேதி வரை சிறையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் தற்போது வரை விடுவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தம் மற்றும் வழக்கு தொடர்பான கடித பரிமாற்றங்கள் கோரப்பட்டும் தரவில்லை. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். இதனை 4 வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற சட்டபணிகள் ஆணைக்குழுவிடம் வழங்க வேண்டும்'' என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அமைச்சராக அமித்ஷாவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக ஜெய்சங்கரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications