தவெக பெண்களின் ரீல்ஸை கொஞ்சம் பாருங்க.. எவ்வளவு கொச்சையாக பேசியிருக்காங்கனு.. கொந்தளித்த திமுக!
சென்னை: திமுக ஆதரவாளர் மீது புகாரளித்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை காவல்துறையினர் பார்க்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்கள், நிர்வாகிகள், பெண்களை கொச்சையாக பேசுவதை தவெக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் சாடியுள்ளார்.
முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய புகாரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். சுமார் 5 மணி நேரம் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு நள்ளிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல் வழங்க கோரிய நிலையில், அவர் அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

தவெக ஆட்சி அமைத்த 2 மாதங்களுக்குள் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தவெக ஆட்சி மீது திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விடியற்காலையில் கூட ஆர்ஜே சரண் ஜெயராமன் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஒரு சாதாரண இளைஞரை வீடு புகுந்து தூக்குகிற அளவிற்கு அவர் என்ன செய்துவிட்டார்.. அவர் மீது சோசியல் மீடியாவில் அவதூறாக பேசுவதாக சில நாட்களுக்கு முன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்படி அவர் என்ன அவதூறாக பேசிவிட்டார்? அவதூறாக பேசியவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே புகார் கொடுத்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை போலீசார் பார்க்க வேண்டும்.
திமுக நிர்வாகிகளை எவ்வளவு அவதூறாக பேசி இருக்கிறார்கள். எவ்வளவு தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார்கள்.. சென்னை மேயரை எப்படி பேசி இருக்கிறார்கள் என்று தெரியும்.. புகார் அளித்த பெண்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் யோக்கியமாக பயன்படுத்தி இருக்கிறார்களா? தவறு செய்தவர்களை விசாரிக்க முன் வராதவர்கள், பிரச்சனை மடைமாற்றம் செய்ய அவதூறு வழக்குகளுக்கு கைது நடவடிக்கை எடுக்கிறது.
என்ன மாற்றத்தை கொடுத்துள்ளது தவெக.. அதிமுகவினரை தவெகவை இணைத்து மாற்றி இருக்கிறார்கள்.. அதிமுகவினர் பேட்ச் பேட்ச்சாக ராஜினாமா செய்து வருகிறார்கள். கரூர் விஜயபாஸ்கருடன் ராஜினாமா படலம் நிற்கப் போவதில்லை. இன்னும் 7 எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக லீட் கொடுக்கிறார்கள். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏ -க்களும் கொஞ்சம் கொஞ்சமாக தவெகவுக்கு வருவார்கள்.
தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் கொண்டு வந்து, தேர்தல் மோடிலேயே சூழலை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு நல்லத் திட்டம் கொண்டு வந்து நல்ல பெயர் எடுக்கும் எண்ணம் தவெகவிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாகவே அவதூறு வழக்குகளில் திமுகவினர் பலரும் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications