ஒழித்து ஓரங்கட்டப்பட வேண்டிய கட்சி.. திமுகவுக்கு அழிவு காலம் நெருங்கிருச்சு! காட்டமாய் பேசிய சிடிஆர்
தேனி: திமுக அரசியலில் இருந்து ஒழித்து ஓரங்கட்டப்பட வேண்டிய கட்சி, அந்த கட்சிக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது எனவும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், தமிழக வெற்றிக் கழகத்தினர் அதற்கு தயாராக வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும், குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான். எந்த தைரியத்தில் ஆட்சி நீடிக்காது என்று ஸ்டாலின் சொல்கிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 1552 நபர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்டம் வழங்கும் விழா வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் வீரபாண்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
சிடிஆர் நிர்மல் குமார்
பின்னர் பேசிய சிடிஆர் நிர்மல் குமார்," திமுக அரசியலில் இருந்து ஒழித்து ஓரம் கட்டப்பட வேண்டிய கட்சி.
திமுகவின் அழிவு காலம் துவங்கி விட்டது. 70 ஆண்டு கால சாதனையை ஒரு ஆண்டிற்குள் தமிழக வெற்றிக்கழகம் செய்து முடிக்கும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தமிழக வெற்றிக் கழகத்தினர் அதற்கு தயாராக வேண்டும் . ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தருவதற்கு தமிழக வெற்றி கழகம் பாடுபடும்.
தவெக
எனவே உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினர் தயாராக வேண்டும் . தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான நபரை தவெகவில் சேர்க்க மாட்டோம். அவரைப் போன்ற ரவுடிகளை, தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம்.
அனிதா ராதாகிருஷ்ணன்
முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்க மாட்டோம். முன்ஜாமீன் ரத்தானதால் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக தலைமை சொல்லாமல் செந்தில் பாலாஜி செய்திருக்க மாட்டார். ஆளுநரிடம் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் தேர்தலை சந்திக்க எங்கள் தலைவர் 100% தயாராக இருந்தார். அதற்கான தகவலை எங்களிடம் வெளிப்படுத்தி இருந்தார்.
ஸ்டாலின்
குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான். எந்த தைரியத்தில் ஆட்சி நீடிக்காது என்று ஸ்டாலின் சொல்கிறார்? எங்கள் ஆட்சி அமைந்த இந்த 30 நாட்களில் ஸ்டாலின் மாபெரும் தலைவராகி விட்டாரா? அவர் மீதான நன்மதிப்பை தான் மக்கள் கொளத்தூரில் காட்டினர். யாராலும் எங்கள் எம்.எல்.ஏ.வை நெருங்க முடியாது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற திமுக முயல்கிறது. எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கிருந்து விலகி தவெக.,வில் இணைகின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications