விஜய் பேச்சில் கருத்தும் இல்லை.. கருத்தியலும் இல்லை.. திமுக வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.. திருமாவளவன்!
சென்னை: தவெக தலைவர் விஜயின் பேச்சில் கருத்தும் இல்லை, கருத்தியலும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். 2026ல் ஆட்சிக்கு வருவோம் என்ற பகல் கனவை கூச்சலாக விஜய் முழங்கியதாக விமர்சித்துள்ள திருமாவளவன், திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். வெயில் காரணமாக பொதுமக்கள் பலரும் மயக்கம் அடைய தொடங்கிய நிலையில், தவெக மாநாடு சுமார் 2 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் அரசியல் களத்தில் விஜயின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் 1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைப் போல், 2026ஆம் ஆண்டிலும் நிகழும்.. நிச்சயமாக தவெக ஆட்சி அமைக்கும் என்று விஜய் பேசியது விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருவாவளவன் பேசுகையில், தவெகவின் 2வது மாநில மாநாடு வெற்று கூச்சல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறது.
உருப்படியான எந்த கொள்கை, கோட்பாட்டு முழக்கமும் இல்லை. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. திமுக வெறுப்பு என்பதே அந்த மேடையில் அவர்கள் உமிழ்ந்த அரசியல். ஆட்சிக்கு வருவோம், ஆட்சிக்கு வருவோம் என்று ஆர்ப்பரித்த பகல் கனவை கூச்சலாக முழங்கிய முழக்கங்கள் தான் காணப்பட்டது.
தவெக தொடங்கப்பட்டு 2 மாநாடுகள் நடத்தப்பட்டும், அவர்கள் கொள்கை கோட்பாடுகள், செயல் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்கே புரியவில்லை என்பதை மாநாட்டின் கூச்சல், ஆரவாரங்களும் நமக்கு உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தனை லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே முன் வைத்திருக்கிறார். திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்திருக்கிறார் நடிகர் விஜய்.
அவரது பேச்சில் ஆக்கப்பூர்வமாக எந்த கருத்தும் இல்லை.. கருத்தியலும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக பற்றிய விஜயின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அதற்கு அதிமுகவினர் தான் பதில் அளிக்க வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி பேசிய போது ஆ.. ஊ.. என்று எகிறியவர்கள், இப்போது வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர், அண்ணா, பெரியாரை பற்றி மிகவும் கொச்சையாக பேசிய பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று அண்ணாமலை பேசினார். அப்போதும் அதிமுகவினர் மவுனமாக இருந்தார். சமூகத்தில் இருந்த விமர்சனத்தை மேற்கோள் காட்டி பேசினேன். உடனடியாக பாய்ந்தனர். இப்போது விஜய் சொன்னதற்கு அதிமுகவினர் பதில் என்ன என்பதை கேளுங்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications