Vijay Speech: "அவரே அரசியலுக்கு வரலை.." மதுரை தவெக மாநாட்டில் ரஜினி பற்றி சூசகமாக பேசிய விஜய்?
சென்னை: இன்று நடைபெற்ற தவெகவின் 2வது மாநாட்டில் பேசிய விஜய், தனது பேச்சில் அவர் விஜயகாந்த், எம்ஜிஆர் எனப் பலரையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது ஒரு கட்டத்தில், "அவரே" அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று பலரும் கேட்டதாகவும் விஜய் பேசினார். ரஜினிகாந்த்தை பற்றியே விஜய் சூசகமாக இப்படிப் பேசியதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். மாலை தான் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.

விஜய் பேச்சு
ஒரு பக்கம் அதீத வெயிலால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இன்னொரு பக்கம் கூட்டமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் போலீசார் முன்கூட்டியே மாநாட்டைத் தொடங்க அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே மாநாடு தொடங்கியது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசிய பிறகு அக்கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டில் பேசினார்.
விஜயகாந்த்- எம்ஜிஆர்
இந்த மாநாட்டில் விஜயகாந்த், எம்ஜிஆர் எனப் பலரையும் குறிப்பிட்டு விஜய் பேசியிருந்தார். குறிப்பாக விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் அந்த அற்புதமான மனிதர் கூட மதுரையைச் சேர்ந்தவர் தான் எனப் பேசினார். தொடர்ந்து தவெக தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், "நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு.. அட இவரெல்லாம் அரசியலுக்கு வர மாட்டார்.. 'அவரே' வரவில்லை.. 'இவரே' வரவில்லை.. விஜய் எப்படி வருவார் எனச் சிலர் ஜோதிடம் சொன்னார்கள்.
"அவரே" வரல
நாம் அரசியலுக்கு வருவதாகச் சொல்லி கட்சிப் பெயரை அறிவித்தவுடன்.. பெயர் தானே அறிவித்துள்ளார் மக்களிடம் பெயர் வாங்க முடியாது என்றார்கள். அடுத்து மாநாட்டிற்கும் அதையே சொன்னார்கள். மாநாடு எல்லாம் பெரிய விஷயம்.. இவர் ஒரே நபராக புஸ்ஸி ஆனந்த்தை வைத்து எப்படி மாநாட்டை நடத்த முடியும்.. மழை வந்து மாநாடு கெட்டுப் போகும் என்றெல்லாம் சொன்னார்கள். உடன் இருப்பவர்களே கூட அப்படிச் சொன்னார்கள். ஆனால், முதல் மாநாடு எப்படி நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.
இப்போது புதிதாக ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் ஈஸி இல்லை என்கிறார்கள். பழசை எல்லாம் விட்டுவிட்டு புதிதாக இதை ஆரம்பித்துள்ளனர். இவர் ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக வருவாராம்.. வந்தவுடன் ஆட்சியைப் பிடிப்பாராம்.. அவராலே முடியவில்லை. இவராலேயே முடியவில்லை.. அவருக்கே அத்தனை வருடம் ஆனது தெரியுமா எனப் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம் கூட்டம் ஓகே.. ஆனால், இது வாக்காக மாறாது என்கிறார்கள். இப்படிக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பாடல்கள் என ஏகப்பட்டது போய் கொண்டு இருக்கிறது" என்றார்.
ரஜினியை சொல்கிறாரா?
விஜய் தனது பேச்சில் யாரையும் குறிப்பிடவில்லை.. இருந்தாலும் கூட அவர் ரஜினியையே மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியதாக நெட்டிசன்கள் விமர்சித்துப் பதிவிட்டு வருகிறார்கள். ரஜினி கடந்த 2017ஆம் ஆண்டில், தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், சில ஆண்டுகளில் உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியலில் நுழையவில்லை என்று சொல்லி கட்சி ஆரம்பிக்காமலேயே போய்விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications