விஜய் பிரச்சாரம் முடிந்த பின் சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.. தவெகவினருக்கு நிபந்தனை
சென்னை: தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின் சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என தவெகவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சுகுமார், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை பயன்படுத்த 5 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கொங்கு மண்டலத்தில் தவெகவுக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஈரோட்டில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 75 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பெரிய கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதற்கு அனுமதி கிடைக்காததால் விஜய் சுற்றுப்பயணம் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்புக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த அனுமதியுடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. விஜய் பங்கேற்க உள்ள இந்த கூட்டம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெறவுள்ளதால், அந்த இடத்தை பயன்படுத்துவதற்காக ரூ.50,000 வாடகை தொகையாக செலுத்த வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.50,000 டெபாசிட் தொகையாக முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டம் முடிந்த பின்பு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை சொந்த செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளையும் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சுகுமார் விதித்துள்ளார்.
1. 50 ஆயிரம் ரூபாய் வாடகையும் , டெபாசிட்டாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
2. ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்த காவல்துறையினர் இடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
3. கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
4. கூட்டம் முடிந்த பின்பு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை சொந்த செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
5. இதன் பிறகு இந்த இடத்திற்கு எந்தவித உரிமையும் கோரக்கூடாது ஆகிய 5 நிபந்தனைகளுடன் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications