சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கணும்! விவசாயிகளை ஏமாற்றுவதாக மத்திய அரசு மீது வேல்முருகன் சாடல்!
சென்னை: வேளாண் கமிஷன் பரிந்துரைக்கு முரணாக செயல்பட்டு மத்திய அரசு மீண்டும் விவசாயிகளை ஏமாற்ற முடிவு செய்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
மத்திய அரசின் செயல்பாட்டை பார்க்கும் போது, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி ஒன்றும் செயல்படுவது ஒன்றுமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் விவரம் வருமாறு;

வேளாண் விளைபொருள்
வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது, உற்பத்தி செலவு, நிலமதிப்பு, குடும்ப பாதுகாப்பு பராமரிப்பு செலவு மற்றும் இதற்குரிய வட்டியையும் சேர்த்து உற்பத்தி செலவாக கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து வழங்கிட வேண்டும். இது தான் வேளாண் கமிஷன் பரிந்துரையாகும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி தான் கடந்த 13 மாதங்களாக இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடி வந்தனர்.

வஞ்சிக்கும் நடவடிக்கை
இதனை ஏற்று பரிசீலிப்பதாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டதால் தான், போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். இதனை அமல்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, ஒப்பந்தத்திற்கு மாறாக மீண்டும் விவசாயிகளை ஏமாற்ற முடிவு செய்துள்ளது. அதாவது, வேளாண் விளைபொருள் மற்றும் உற்பத்திக்கான செலவு திட்டமிடல் குழு பரிந்துரையை ஏற்று, விவசாய விளைபொருட்களுக்கு நிகழாண்டைவிட 3 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே விலையை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும்.

இடு பொருட்கள்
இடுபொருட்கள் மற்றும் ஏனைய செலவுகள் 15 முதல் 20 விழுக்காடு வரை கடந்த ஓராண்டில் உயர்ந்திருக்கும் நிலையில், 3 முதல் 5 விழுக்காடு விலை உயர்வு என்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கையாகும். ஒருபுறம், டி.ஏ.பி, பொட்டாஸ் போன்ற இரசாயன உரங்கள் விலை 15 விழுக்காடு வரை உயர்வு, மறுபுறம், இரசாயன உரங்களின் தட்டுப்பாட்டால் கூடுதல் விலை கொடுத்து அல்லது துணைப் பொருட்களையும் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

விலையை உயர்த்தி
இந்த நிலையில், விவசாய விளைபொருட்களுக்கு நிகழாண்டைவிட 3 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே விலையை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஒப்பந்த அடிப்படையில் வேளாண் விளை பொருளுக்கு ஏற்ப விலையை உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications