வேலையை காட்டிய ஆளுநர்.. முதல்வர் கனவில் ஓட்டை! உச்சநீதிமன்றம் விரைய விஜய் அதிரடி முடிவு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. எனவே முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்க கோரி விஜய் ஆளுநரிடம் கடிதம் வழங்கியிருந்தார். ஆனால், ஆளுநர் சைலன்ட் மோடில் இருக்கிறார். இதனால், உச்சநீதிமன்றம் சென்று இந்த விஷயத்தை டீல் செய்யலாம் என விஜய் தரப்பு யோசித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. தவெக 107 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் ஜெயித்திருப்பதால் கணக்கு 108 என வராது.

ஆளுநரை சந்தித்த விஜய்
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 112ஆக அதிகரித்திருக்கிறது. இருப்பினும் இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவை. சிபிஐ, சிபிஎம், விசிக ஆதரவு கொடுத்தால் சரியாக இருக்கும். ஆனால், இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் தன்னை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ள அழைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து விஜய் கடிதம் கொடுத்திருந்தார்.
ஆளுநரின் செயல்
மரபுபடி இந்நேரம் விஜய்யை அழைத்திருக்க வேண்டும். ஆளுநரின் வேலை அதுதான். எந்த கட்சி பெரிய கட்சியோ, அதை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் கேட்டால் கொடுக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அதை செய்யவில்லை. விஜய்யை இன்னும் அழைக்காமலேயே இருக்கிறார். கேட்டால் விஜய்யிடம் 118 எம்எல்ஏக்கள் இல்லை என்று ஆளுநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றம்
அதைப்பற்றியெல்லாம் ஆளுநர் கவலைப்படக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் யாருடன் கூட்டணி வைப்பது என்கிற முடிவை எடுப்பார்கள். இதைப்பற்றி ஏற்கெனவே உச்சநீதிமன்றம், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தெளிவாக கூறியிருக்கிறது. அதாவது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான். ஆளுநர் மாளிகை கிடையாது என்று. எனவே கடிதம் கொடுத்தால் ஆளுநர் அழைக்க வேண்டும்.
பாஜகவின் ஆளுநர்கள்
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் பாஜக குடைச்சல் கொடுப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் செயல் இந்த விமர்சனங்களை மேலும் வலுவடைய செய்திருக்கிறது.
எனவே இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் சென்று டீல் செய்துக்கொள்ளலாம் என விஜய் தரப்பு யோசித்து வருகிறது. அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
1989-ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதல்வராக இருந்த எஸ். ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா தளம் அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டது என்ற ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில், இந்திய அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. ஆனால், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி எஸ். ஆர். பொம்மை நீதிமன்றத்தை அணுகினார்.
வரலாற்று தீர்ப்பு
1994-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி, ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது. அதை சட்டமன்றத்தில் மட்டுமே வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டும் என கூறியிருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications