எல்லை மீறும் தவெக நிர்வாகிகள்.. அரசு மருத்துவமனையில் அத்துமீறி ஆய்வு? திமுக ஐ.டி விங் பாய்ச்சல்!
சென்னை: ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், தவெக கட்சி நிர்வாகிகளின் அட்ராசிட்டீஸ் எல்லை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவெக மருத்துவ அணி நிர்வாகிகள், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணியினர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். தென்காசி மேற்கு மாவட்ட தவெக மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் மருத்துவ அணியில் பொறுப்பாளராக இருப்பவர்கள் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துகிறார்கள் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தவெக மருத்துவ அணி நிர்வாகி வாசுதேவி மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரூர் துயரம் தொடர்பான வழக்கில் 41 பேர் பலியானது தொடர்பாக அவதூறு பரப்பியதாக வாசுதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையோடு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத நபர், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

திமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications