பிளஸ் 2 பொதுத் தேர்வு: வாழ்வில் சிகரம் தொட.. மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளைச் சேர்ந்த 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications