முன்னாள் டிஜிபி, ஏடிஜிபி.. 18 ஓய்வுபெற்ற அதிகாரிகள் டீமை களமிறக்கும் விஜய்.. மிகப்பெரிய பிளான்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக, எதிர்கால பொதுக்கூட்டங்களுக்காக புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கான திட்டமிடல்களை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அவர் அமைக்கவுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 100 பேர் காயமடைந்தனர். தமிழக வெற்றி கழகம் (TVK) நிறுவனரும் தலைவருமான விஜய்யால் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

கரூர் தவெக அரசியல் பேரணி கொடூரம்
கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெண்ணெய்மலை, வேலாயுதம்பாளையத்தில், விஜய்யின் வருகை சுமார் ஏழு மணி நேரம் தாமதமானதால் கூட்ட நெரிசல் அதிகம் ஆனது. அவரது வாகன அணிவகுப்பைக் காண பெரும் திரளான மக்கள் அவரை நோக்கி முன்னேறியபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 41 பேர் பலியானார்கள். இந்த நிகழ்விற்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். தேசிய அளவில் மட்டுமன்றி உலக அளவில் இந்த விவகாரம் கவனம் பெற்றது.
மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவித்தன. TVK கட்சியினர் போலீசாரின் ஆலோசனையைப் புறக்கணித்ததாகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், விஜய் காவல்துறை வழங்கிய விதிமுறைகளையும், போக்குவரத்து விதிகளையும் மீறியதாகவும் தெரிவித்தனர்.
கரூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பொதுச் செயலாளர் என். ஆனந்த் உட்பட பல்வேறு TVK தலைவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளைத் தொடங்கினர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கில் விஜய் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்தது.
விஜய் அமைக்கும் குழு
இந்த நிலையில்தான் தவெக கட்சிக்கு ஆலோசனை வழங்க புதிய குழுவை விஜய் உருவாக்க உள்ளாராம். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அவர் அமைக்கவுள்ளார்.
இந்தக் குழுவில், முன்னாள் காவல்துறை இயக்குனர் (DGP) மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) உட்பட 18 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம்பெறுவார்கள். கரூர் விவகாரம் போன்ற சம்பவங்கள் இனி நடப்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்த தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்தக் குழுவின் முதன்மைப் பணி, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு திட்டமிடல் குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, வழிகாட்டுவதாகும். விஜய்யின் பொது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இனி அவர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருக்கும். இதனால் மக்கள் அதிக அளவில் கூட வேண்டி இருக்கும். அதை எல்லாம் சமாளிக்க திட்டமிடல் அவசியம். இதையடுத்தே இந்த குழுவை விஜய் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆண்டு கால அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள், அச்சுறுத்தல் மதிப்பீடு, நேரத்தை கடைபிடித்தல், மேடைப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற விவகாரங்களில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவார்கள்.
அரசு வழங்கும் பாதுகாப்பை மட்டும் நம்பி இருக்காமல், விஜய்க்கு ஏற்றபடி கூட்டங்களை திட்டமிடுவது அவசியம் என்று கருதி தவெக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications