அதிமுக பெண் நிர்வாகி உள்பட 2 பேர் கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிரடி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கறிஞர் ஒருவர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுவரை மொத்தமாக 3 கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை 3 கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது ஏற்கெனவே கொலை நடந்ததும் திமுகவின் அருள், பாஜகவின் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணைச் செயலாளர் மலர்க்கொடி கைதான நிலையில், சென்னை பாஜக மகளிர் அணி துணைச் செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வருகிறது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அந்த தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் வழக்கறிஞர் மலர்க்கொடி எனும் பெண் கைது செய்யப்பட்டிருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமை எனில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். இது தொடர்பாக விசாரணையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருக்கும் என்றும், எனவே விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியிருந்தது.
இத தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில், சென்னை காவல்துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அருண் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்துதான் என்கவுண்டர் சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications