வேகம் காட்டும் ஸ்டாலின்.. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்.. திமுக சின்னத்திலேயே போட்டி!
சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து இதனை உறுதி செய்த ஜவாஹிருல்லா திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இன்றும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் காங்கிரஸ், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இந்த நிலையில் முதல் கட்சியாக திமுக உடனான கூட்டணியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் - காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்
இதனையடுத்து இரண்டாவது கட்சியாக திமுகவில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜவாஹிருல்லா முன்னிலையில் தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் 2 தொகுதிளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள்
மேலும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சி கடந்த முறை பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலுமே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது.
பாபாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் ப. அப்துசமதும் போட்டியிட்டனர். எனவே இந்த தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி திமுக சின்னத்திலேயே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தொகுதியிலும் வெற்றி பெற்றதனால் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே ஒதுக்க வாய்ப்புள்ளது.
புதிதாக திமுகவில் இணைந்த கட்சிகள்
2021 தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலை மிகப் பெரிய கூட்டணி பலத்துடன் திமுக சந்திக்க இருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் அங்கம் வகித்தன. இந்தக் கட்சிகள் திமுக கூட்டணியில் அப்படியே நீடிக்கிறது. வரும் தேர்தலில் புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன.
இதனால், திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயந்திருக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றன. முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்ட உள்ளன.
19 கட்சிகள் என்னென்ன?
திமுக கூட்டணி கட்சிகள் தற்போதைய சூழலில்,
1. திமுக,
2. காங்கிரஸ்,
3. மதிமுக,
4. இந்திய கம்யூனிஸ்ட்,
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
6. விடுதலைச் சிறுத்தைகள்,
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
8. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி,
9. மனிதநேய மக்கள் கட்சி,
10. அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்,
11. தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
12. மக்கள் விடுதலைக் கட்சி,
13. ஆதிதமிழர் பேரவை,
14. மக்கள் நீதி மய்யம்,
15. தேமுதிக,
16. எஸ்டிபிஐ,
17. மனிதநேய ஜனநாயகக் கட்சி,
18. முக்குலத்தோர் புலிப்படை,
19. கொங்கு இளைஞர் பேரவை
ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன். இதில் ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications