அதிமுகவை உடைக்கும் ”பாஜக சதி”யை தவிடு பொடியாக்கி தகர்த்த எடப்பாடி பழனிசாமி -கூட்டணி முறிவு பின்னணி!
சென்னை: அதிமுகவின் இரு மூத்த தலைவர்கள் உதவியுடன் கட்சியையே இரண்டாக உடைக்க டெல்லி பாஜக சதித் திட்டம் தீட்டியதால் உஷாரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடனான கூட்டணியையே முறிப்பதாக இன்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கேட்டு அடம்பிடித்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வந்ததாலும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

கூட்டணி முறிவு அறிவிப்பு: இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லவே இல்லை என மூத்த தலைவர் ஜெயக்குமாரை அறிவிக்க சொன்னார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னரும் ஒரு சில சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அண்ணாமலை தரப்பு இறங்கி வரவில்லை.
பாஜகவின் குரலாக இரு தலைவர்கள்: இந்நிலையில் அதிமுகவின் இரண்டு தலைவர்கள் ரகசியமாக கேரளாவின் கொச்சி சென்று அங்கிருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்களைக் கொடுத்தாக வேண்டும் என பாஜகவின் குரலாக அதிமுகவில் செயல்பட்டு வரும் இவர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து கண்காணித்து வந்ததில்தான் இரு தலைவர்களும் திடீரென டெல்லி செல்வதும் தெரியவந்தது.
தூதர்களை உடனே டெல்லிக்கு அனுப்பிய எடப்பாடி: டெல்லிக்கு சென்று தமக்கும் அதிமுகவுக்கும் எதிராக ஏதேனும் சதித் திட்டத்தை இருவரும் நிறைவேற்றுவார்களோ என அச்சப்பட்ட நிலையில் மேலும் சில தலைவர்களையும் உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் அந்த இரு தலைவர்கள் தங்க திட்டமிட்டிருந்த அதே ஹோட்டலில்தான் தமது தூதர்களையும் தங்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
சதித் திட்டம் பஞ்சரானதே.. : இதனால் தாங்கள் கொண்டு வந்த சதித் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் எடப்பாடி பழனிசாமியின் தரப்பாகவே ஜேபி நட்டாவை சந்தித்தாக வேண்டிய நெருக்கடி அந்த தலைவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு தலைவர்களும்தான் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொள்ளவே கூடாது என திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தனர்.
சதியை தவிடுபொடியாக்கிய எடப்பாடி பழனிசாமி: ஆனால் இந்த இரு தலைவர்களது சதித் திட்டங்களை தெரிந்தும் சலசலப்பு வந்துவிடக் கூடாது என்பதால் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த இரு தலைவர்களும் பாஜக கூட்டணி வேண்டும் என்கிற டோனில் பேசிய போதும் அமைதி காத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகள் முடிவின் அடிப்படையில் பாஜகவுடனான கூட்டணியே வேண்டாம் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை உடைக்கும் பாஜக சதித் திட்டத்தை தவிடுபொடியாக்கி தகர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications