செக்போஸ்ட்களில் இ பாஸை காட்டித்தான் பயணித்தோம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி பதிலடி
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இ பாஸ் வாங்கித்தான் போய் வந்ததாக உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் முழு ஊராடங்கு அமலில் உள்ளதால். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும், தூத்துக்குடியிலும் அனுமதி பெறாமல் சட்டத்தை மதிக்காமல் அவர் சென்றுள்ளார். இதற்கான விளக்கத்தை அவர் தர வேண்டும். இ பாஸ் விவகாரத்தில் அனைவரும் சமம் தான். யாருக்கும் விதிவிலக்கு அல்ல என்று கூறினார்.

உதயநிதி குறித்து கேள்வி
இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் உதயநிதியை விமர்சித்து கேள்வி எழுப்பினார். ஊரடங்கில் இபாஸ் பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும் தானா?எதிர்க்கட்சியினருக்கு இல்லையா என்ற: சீமான் கேள்வி எழுப்பினார். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தும் முறை உள்ள நிலையில். அந்த நடைமுறை கனிமொழி, உதயநிதி, கேஎஸ் அழகிரி பயணிக்கும் போது ஏன் கடைபிடிக்கவில்லை என்றும் சீமான் கேட்டார்.

பதில் அளித்துள்ளேன்
இந்நிலையில் தனது தூத்துக்குடி பயணம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், ‘மெயின் ரோடு' செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.

20 அடிக்கு ஒரு போலீஸ்
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டில், சாத்தான்குளத்திலிருந்து மதுரை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தோம். சேலம் சாலையிலிருந்து சென்னைவரை சுமார் 250 கி.மீட்டருக்கும் மேல் இருபது அடிக்கு ஒருவரென கொளுத்தும் வெயிலில் ஆண், பெண் காவலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு பணியோ என நினைத்தபடி காவலர்களிடம் விசாரித்தேன்.

அவசியமா
‘சேலம் டு சென்னை செல்லும் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கான பந்தோபஸ்து' என்றனர். முதல்வருக்கு பாதுகாப்பு அவசியமே. ஆனால் ஊரடங்கில் அனைவரும் வீடடங்கியுள்ள சூழலில் முதல்வரை யாரிடமிருந்து பாதுகாக்க இந்த பந்தோபஸ்து? காவலர்கள் சுழற்சிமுறையில் பணிசெய்யும் பேரிடர் சூழலில் இந்த ஆடம்பரம் அவசியமா?

உதயநிதியின் பயணம்
சமீபகாலமாக அதிகரித்து வரும் போலீசாரின் வன்முறைக்கு இதுபோன்ற பணிச்சூழலும் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. காவலர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வகையில் மணிக்கணக்கில் வேலையின்றி ஒரேயிடத்தில் நிற்கவைக்கப்படுவதை முதல்வர் அவர்கள் தவிர்க்கலாமே" என்று கூறியிருந்தார். இதையடுத்தே உதயநிதியின் தூத்துக்குடி பயணம் குறித்து கேள்விகள் எழுந்தது.












Click it and Unblock the Notifications