விஜய்யின் சைக்கிள்,பெட்ரோல் விலையா இருக்கும்.. அஜித்தின் மாஸ்க், அவரிடம்தான் கேட்கனும்..உதயநிதி கூல்
சென்னை: நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்தும், அஜித் கறுப்பு சிவப்பு மாஸ்க் அணிந்தது குறித்தும் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறிய உதயநிதி, இருப்பினும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் சைக்கிளில் வந்து வாக்களித்து இருக்கலாம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Array
இன்று காலையிலேயே நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போட்டார். அப்போது அஜித் கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்த மாஸ்க்கை அணிந்திருந்தார். அஜித் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் விதமாகவே கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்து வந்ததாக இணையத்தில் தகவல் பரவியது. அதேபோல நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கைப் பதிவு செய்தார். அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையிலேயே சைக்கிளில் வந்ததாகத் தகவல் பரவியது. இந்த இரண்டு விஷயங்களும் இணையத்தில் பெரும் விவாதமானது.
உதயநிதி பளீச்
இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறுகையில், இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நடிகர் விஜய் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையில்கூட சைக்கிளில் வந்திருக்கலாம். இருப்பினும், காலை முதல் நான் சேப்பாக்கம் தொகுதியில் தான் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகிறேன். அந்த வீடியோக்கள் எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை. எனவே அது குறித்து எதுவும் தெரியாது.
தேர்தல் ஆணையம்
மேலும், தேர்தல் சுமுகமாக நடந்து வருவதாகவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களிப்பதைப் பார்க்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாலை நேரத்தில் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்க வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தற்போதுவரை திருப்தி அளிக்கும் வகையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சொன்னதைச் செய்யும் கட்சி
எத்தனை தொகுதிகளில் திமுக வெல்லும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அது, வரும் மே 2ஆம் தேதி தெரியும் என்று பதிலளித்தார். ஜூன் 3ஆம் தேதி சொன்னபடி ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் எங்கள் கட்சி சொன்னதைச் செய்யும் கட்சி என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.