உதயநிதி ஸ்டாலின் காரை வழிமறித்த த.மா.கா தொண்டர்கள்.. கடும் வாக்குவாதம்.. என்னாச்சு.. நடந்தது என்ன?
சென்னை: அரியலூர் அருகே, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி காரை மறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சேலம் அருகே திமுக எம்பி தயாநிதி மாறன் காரை பாமகவினர் முற்றுகையிட்டனர். சிலர் கல்வீசி தாக்கியதில் கார் முகப்பு பகுதி உடைந்து போனது.
அன்புமணிக்கும், ராமதாசுக்கும் கொடுக்க திமுகவிடம் பணம் இல்லை என்றும், அந்த பணம், அதிமுகவிடம்தான் இருக்கிறது என்றும் தயாநிதி மாறன் ஒரு பிரஸ் மீட்டில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த போராட்டம் நடத்தப்பட்டபோது வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உதயநிதி காரை த.மா.காவினர் ஏன் முற்றுகையிட்டனர், இதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி கார்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில், உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதேபோலத்தான் நேற்று அரியலூர் மாவட்டம் காடாதித்தம் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். பிறகு திருமானூர் என்ற பகுதிக்கு காரில் சென்றார். அவர் காரில் சென்றபோது பின்னால் திமுக நிர்வாகிகள் கார்கள் சிலவும் சென்றன.

மூப்பனார் மேடை
இந்த நிலையில்தான், தமாகா கட்சியினர், மனோஜ் என்பவர் தலைமையில் தமாகா கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் காரை வழிமறித்தனர். திருமானூரில் அரசு நிதியில் மூப்பனார் அரங்கு மேடை என்று பஞ்சாயத்து பெயர் சூட்டியிருந்தது. ஆனால் திமுகவினர் கூட்டத்திற்காக அந்த பெயர் மறைக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்டுள்ளது என மனோஜ் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதியை நெருங்கிய தமாகாவினர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமாகாவினர், உதயநிதி கார் ஜன்னல் அருகேயே வந்து அவரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கை கலப்பு ஏற்படுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது. அப்போது உதயநிதி காரில் தொங்கியபடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த திமுகவினர், தமாகாவினரை உதயநிதி ஸ்டாலினை மேலும் நெருங்காமல் மறைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திமுக விளக்கம்
இது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, மூப்பனார் மேடை அரங்கத்தை புதுப்பிக்கும் பணி ஊராட்சி மூலமாக ஏற்கனவே நடைபெற்று வருகிறது. அப்போது பெயிண்ட் அடித்தனர். அப்போது மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டு மறுபடி எழுதபடாமல் நிலுவையில் இருக்கிறது. அங்கு திமுக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் பெயரை நீக்கியது திமுக என்று தப்பாக புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது என்கிறார்கள் சுறுக்கமாக.












Click it and Unblock the Notifications