திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்..அமைச்சராவது எப்போது?
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகரும், முரசொலியின் நிர்வாக இயக்குநரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது.
இதனைப் பின்பற்றி பல மாவட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார்.
திமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். துணை செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற போது அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கோரிக்கையும் அமைச்சர்களால் வைக்கப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாப்பட உள்ள நிலையில் பிறந்த நாள் பரிசாக மீண்டும் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications