வேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி!
Recommended Video
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணி கோட்டாவில் யாருக்கெல்லாம் வாய்ப்பு தரலாம் என்பதை இப்போதே உதயநிதி அடையாளம் கண்டு வருவதால் அந்த அணியின் நிர்வாகிகள் விழுந்து விழுந்து கட்சிப்பணியாற்ற தொடங்கியுள்ளார்கள்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்தவரை சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் இளைஞரணிக்கு என்று குறிப்பிட்ட சதவீத சீட்டை கொடுத்துவிடுவார்.
அதை வைத்து யாருக்கு சீட் கொடுக்கலாம் என்ற முடிவை அப்போது இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் முடிவெடுப்பார். இந்நிலையில் கருணாநிதி பாணியை அப்படியே பின்பற்றத் தொடங்கியுள்ளார் ஸ்டாலின்.

தீவிர கவனம்
இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணி கோட்டாவில் தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார் உதயநிதி. திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்ற பின்பு உதயநிதி கையில் எடுத்த முதல் அசைன்மெண்ட், குளம் தூர்வாரும் பணி. அந்தப்பணியை தனது கோரிக்கையை ஏற்று யார் சிறப்பாக செய்து முடிக்கிறார்கள் என்பதை கவனித்து வருகிறார் உதயநிதி.

விரல்நுனியில் தகவல்
குளம் தூர்வாரும் பணியை உண்மையான அக்கறையோடு செய்வது யார், விளம்பரத்துக்கு செய்வது யார் என்பதெல்லாம் உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறதாம் அவரது டீம். ஆள் பார்க்க கண்டுகொள்ளாதது மாதிரி தெரிந்தாலும் படு விவரமாக இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

அப்படியே தாத்தா போல
திமுக தலைவர் கருணாநிதி எப்போதுமே விரல் நுனியில் அத்தனை விவரங்களையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல, தமிழகமெங்கும் உள்ள இளைஞரணி நிர்வாகிகளின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை தனது தாத்தா கருணாநிதியை போல் விரல் நுனியில் வைத்திருக்கிறாராம்.

அடையாளம்
உண்மையான அர்ப்பணிப்போடு கட்சி பணியாற்றும் இளைஞர்களை கை தூக்கி விட வேண்டும் என நினைக்கும் உதயநிதி, சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆர்ப்பாட்டமின்றி அடையாளம் காண்கிறார். இதனால் அவரது குட்புக்கில் இடம்பெறுவதற்காக இளைஞரணி நிர்வாகிகள் போட்டி போட்டு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications