என்னாது உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.பி சீட்டா.. பரபரக்கும் திமுக
தென்சென்னை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: தென் சென்னை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி இறந்த பிறகு அரசியல் ஈடுபாட்டில் அதிகமாகவே ஈடுபட்டார். வாரிசு அரசியல் என பாஜக தரப்பில்கூட அவரை கடுமையாக விமர்சனமும் செய்தனர்.
இதனால் திமுக இளைஞர் அணி பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பின்னர் திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும், உதயநிதி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. சொந்த தொகுதி என்பதால் அதிக வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளராக உதயநிதி நிறுத்தப்படாததுடன், இடைத்தேர்தலே ரத்தானது.

தென்சென்னை
இதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதனால் வரும் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவாரோ என்ற பேச்சு எழுந்தபடியே உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி முதல் திமுகவின் விண்ணப்பம் விநியோகம் நடந்து வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயவர்த்தன்
திமுக இலக்கிய அணி பொருளாளர் சந்திர பாபு என்பவர்தான் இதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆர். வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா, டி.ஆர்.பாலு என பெரிய பெரிய தலைகள் போட்டியிட்டு வென்ற இந்த தொகுதியில் இப்போதைக்கு சிட்டிங் எம்பி அதிமுகவின் ஜெயவர்த்தன். இந்த முறையும் இவரே இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஜெயலலிதா
இளைஞர் என்பதாலோ, அல்லது ஜெயக்குமாரின் மகன் என்பதாலோ தெரியவில்லை, மீனவ சமூகத்தை சேர்ந்த ஜெயவர்தனை திடீரென ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்தார். அது மட்டுமல்ல அடிக்கடி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் தனது இருப்பை வெளிப்படுத்தியே வந்து கொண்டிருக்கிறார்.

திமுக-அதிமுக
இப்போது சிக்கல் என்னவென்றால், ஒருவேளை உதயநிதி தென்சென்னையில் போட்டியிட்டால், திமுக-அதிமுக நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகும். உதயநிதி, ஜெயவர்த்தன் இருவருமே இளைஞர்கள்.. இருவருமே பலமான பின்னணி, ஆழமான பின்புலம் என அரசியல் அறிமுகம் ஆனவர்கள். அதனால் தென்சென்னை தொகுதி இன்னும் கொஞ்ச நாளைக்கு விறுவிறுப்பாக இருக்க போவது மட்டும் தெளிவாக தெரிகிறது.

எம்பி சீட்டா?
ஆனால் அரசியலில் பால பாடம் கூட இன்னும் படித்து முடிக்காத உதயநிதி ஸ்டாலினுக்கு எடுத்த எடுப்பிலேயே எம்.பி சீட் கொடுத்தால் அது பொதுமக்கள் மத்தியில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. மக்கள் இதை ஏற்பார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஸ்டாலினுக்கு கூட கருணாநிதி பல டெஸ்ட்டுகளை வைத்த பிறகுதான் பெரிய பெரிய வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு எடுத்த எடுப்பிலேயே எம்.பி சீட் என்றால் அது திமுகவினரிடையே கூட விவாதத்தை ஏற்படுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications