ஒடிசா ரயில் விபத்து.. ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி விளக்கம்! சென்னை திரும்பியவுடன் மீட்டிங்
சென்னை: ஒடிசாவுக்கு தமிழ்நாடு அதிகாரிகள் குழுவுடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை சென்னை திரும்பியவுடன் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், சிகிச்சை தொடர்பாக விளக்கமளித்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்யவும், மீட்பு பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை வழங்கவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு நேற்று காலை ஒடிசா சென்றது.
அரசு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒடிசா சென்றனர். அங்கு அதிகாரிகள் குழு விபத்து நடந்த பாலசோரில் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் கண்காணித்தனர்
கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் குழு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து விபரம் சேகரித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது. அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வீடியோ கால் மூலம் கள நிலவரத்தை எடுத்துரைத்து இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்து aவர் கேட்டறிந்தார்.
அத்துடன் புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினரிடம், ரயில் விபத்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் மற்றும் விவரங்கள் குறித்து அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு விமானம் மூலமாக சென்னை திரும்பி இருக்கிறது. அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் முதலமைச்சர் முக ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர்.
அவரிடம், ரயில் விபத்து நடந்த பாலசோரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவது மற்றும் பயணிகள் ரயில் மூலம் சென்னை திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications