வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க.. ரெய்டு ஒருபக்கம் திமுகவை தோண்டி எடுக்க.. கூலாக பேசிய உதயநிதி!
சென்னை: திமுகவினரை குறிவைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு கூலாக பதில் அளித்துள்ளார் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சனாதனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை இன்னுமா விடல என சிரித்தபடி கேட்டார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் மகனே பேசியிருக்கிறார் என்று பிரதமர் கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் ஏற்கெனவே பலமுறை பதில் சொல்லிவிட்டேன். சிஏஜி அறிக்கையைப் பற்றி பேசினோம், மணிப்பூர் மாநிலம் கடந்த 5 மாதங்களாக என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தை திசைதிருப்பத்தான் சனாதன சர்ச்சையை பற்றி பேசுகின்றனர்.
சனாதனம் குறித்து நான் தொடர்ந்து பேசுவேன். பெரியார், அம்பேத்கர் சனாதனம் குறித்து பேசினார்கள். எங்கள் கட்சித் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் என பலரும் பேசியிருக்கின்றனர். அதைவிட நான் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் நான் பேசியது தான் இப்போது பேசப்பட்டு வருகிறது. எனவே, பாஜகவினர் திசை திருப்ப வேண்டாம்" என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுகவினரை குறிவைத்து தொடர்ந்து நடைபெற்று வரும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை அடிக்கடி வரும். நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போல் வந்து செல்கின்றனர். அதனால் கவலை இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications