திடீர் வருகை... திக்குமுக்காடிய விஜயகாந்த் குடும்பம்... உதயநிதியுடன் செல்ஃபி எடுத்த தேமுதிகவினர்..!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் நலமும் விசாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையிலும் அரசியல் நாகரீகத்துடன் உதயநிதி ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் அவரது இமேஜை உயர்த்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
அசத்தல்.. விஜயகாந்த்தை வீட்டுக்கே போய் சந்தித்து நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்
வெறுப்பு அரசியல்
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் திமுக கூட்டணியில் கூட தேமுதிக இடம்பெறவில்லை. ஆனாலும், அரசியல் நாகரீகம், பண்பாடு காரணமாக இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார் உதயநிதி.
விஜயகாந்த் இல்லம்
உதயநிதி ஸ்டாலினின் வருகை குறித்த தகவல் காலையில் தான் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு சொல்லப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அவர்களே திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். இதையடுத்து விஜயகாந்தை தயார்செய்து வரவேற்பறைக்கு அழைத்து வந்துள்ளார் அவரது மைத்துனர் சுதீஷ். உதயநிதி வருகை தந்த போது சுதீஷும், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் தான் உடன் இருந்திருக்கிறார்கள்.
ஆர்வமுடன் போட்டோ
ஓரிரு நிமிடங்கள் விஜயகாந்திடம் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின், அவரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். அப்போது விஜயகாந்த் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் உதயநிதியை பார்த்ததும் அவரது அருகில் வந்து உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறோம் எனக் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனிடையே உதயநிதியை வழியனுப்ப வாசல் வரை வந்த எல்.கே.சுதீஷ் இதை கவனிக்கத் தவறவில்லை.
அரசியல் செயல்பாடுகள்
உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளில் பொலிடிக்கல் மெச்சூரிட்டி தெரிவதாகவும் எதிர்காலத்தில் தமிழகத்தில் வெறுப்பு அரசியல் இருக்காது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே முன்னோட்டமாக அமைந்திருக்கிறது எனவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் -விஜயகாந்த் சந்திப்பு அரசியல் களத்தில் பலரது புருவம் உயர்த்த வைத்துள்ளது.