வாழ்க பெரியார்! உதயநிதி கொடுத்த “சிக்னல்”.. நாளை அமைச்சராகும் நிலையில் விடுதலை இதழுக்கு ஆயுள் சந்தா
சென்னை: நாளை தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியார் தொடங்கிய விடுதலை இதழுக்கு ஆயுள் சந்தாவாக ரூ.1 லட்சத்தை கொடுத்து, வாழ்க பெரியார் என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
தந்தை பெரியார் சுயமரியாதை போராட்ட காலத்தில் இதழ்கள், ஏடுகளை தொடங்கி சாதியம், அடிமைத்தனம், இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு எதிராகவும், சமூக நீதியை உணர்த்தும் வகையில் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டு வந்தார்.
குடி அரசு வார இதழ், ரிவோட்டு ஆங்கில வார இதழ், ஜஸ்டிசைடு, புரட்சி வார இதழ், பகுத்தறிவு வார இதழ், விடுதலை, உண்மை மாத இதழ், தி மாடர்ன் ரேஷனலிஸ்டு ஆங்கில இதழ் என பல பத்திரிகைகளை நடத்தி வந்தார்.

விடுதலை இதழ்
இதில் பல பத்திரிகைகள் தற்போது பதிப்பில் இல்லை. தற்போது வரை செயல்பாட்டில் இருந்து வருவது திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான விடுதலை மட்டுமே. கடந்த 1935 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வாரம் இரு முறை வெளியிடப்படும் இதழாக இதனை வெளியிட்ட தந்தை பெரியார், 1937 ஆம் ஆண்டு சூன் ஒன்றாம் தேதி நாளிதழாக வெளியிட்டார்.

திராவிடர் கழகத்தின் இதழ்
அன்றிலிருந்து இன்று வரை விடுதலை நாளிதழ் எந்த தடையுமின்றி அச்சிடப்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கைகள், சமீபத்திய சிக்கல்களுக்கு பெரியாரின் சுயமரியாதை பாதையில் இருக்கும் தீர்வு என பல விதமான கட்டுரைகளை விடுதலை வெளியிட்டு வருகிறது. இதன் ஆசிரியராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இருந்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் சந்தாலபக்
இந்த நிலையில் விடுதலை நாளிதழுக்கான ஆண்டு சந்தாவாக ஒரு லட்சம் ரூபாயை திராவிடர் கழக நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

வாழ்க பெரியார்
அதில், "பகுத்தறிவு,சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் விடுதலைக்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.

எம்.எல்.ஏ. உதயநிதி
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவரை அப்போதே அமைச்சராக்க வேண்டும் என அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

பரவிய செய்திகள்
ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையசைக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து கட்சிப் பணிகளில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் சிலரும் இதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

நாளை பதவியேற்பு விழா
இந்த நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று, நாளை காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications