ஓட்டுப்போட வந்த உதயநிதி சட்டையில் கறுப்பு சிவப்பு கொடி...தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக
கருப்பு சிவப்பு கொடி சின்னம் பொறித்த சட்டை அணிந்து வந்து வாக்களித்த உதயநிதி ஸ்டாலின் பற்றி தேர்தல் ஆணையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.
சென்னை: திமுக கட்சிக்கொடியின் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்து ஓட்டுப்போட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷனிடம் அதிமுக புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் அது திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னம் அல்ல என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வாக்களிக்க வரும் போது வெள்ளைச்சட்டையில் கருப்பு சிவப்பு கொடி பொறித்த சின்னத்தை அணிந்திருந்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து வாக்களித்தாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைப்படி வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். உதயநிதி ஸ்டாலின் வாக்குச்சாவடிக்கு சின்னத்தை அணிந்து வந்து வாக்களித்ததாக அதிமுகவின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் சட்டையில் இருந்தது திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான உதயசூரியன் சின்னமல்ல என்றும் அது திமுக இளைஞர் அணியினரின் சின்னம் என்றும் தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications