கட்டித்தழுவி.. கண்ணீர்விட்டு.. உக்ரைனில் இருந்து சென்னைக்கு திரும்பிய தமிழக மாணவர்கள்.. நெகிழ்ச்சி
சென்னை: உக்ரைனில், ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த 5 தமிழக மாணவர்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்.
உக்ரைனை பொறுத்தமட்டில் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ருமேனியா வழியாக
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசும், தமிழகம் உள்பட பிற மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் சில இடையூறுகள் ஏற்பட்டன. மாற்று வழியில் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதாவது உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

11 மாணவர்கள்
அந்த வகையில் தற்போது வரை 3 சிறப்பு விமானங்களில் 700க்கும் அதிக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ரூமேனியாவில் இருந்து 5 பேர், ஹங்கேரியில் இருந்து 11 பேர் என மொத்தம் 16 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் டெல்லி, மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் தமிழகம் வர உள்ளனர்.

ஐவர் சென்னை வருகை
முதற்கட்டமாக சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஷகீர், திருவல்லிக்கேணி ஹரிஹரசுதன், சேலம் சாந்தனு பூபாலன், அறந்தாங்கி செல்வபிரியா, தேனி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் இன்று காலை சென்னை வந்தனர். இவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதிகாரிகள் வரவேற்றனர். மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர் கட்டித்தழுவி பாசத்தை வெளிப்படுத்தினர். உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் சொந்தஊர் திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என கூறியுள்ளது.

செலவு ஏற்பு
முன்னதாக கேரளாவை சேர்ந்த 11 மாணவ-மாணவிகள் உக்ரைனில் இருந்து சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த 16 ஆயிரம் மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியை துவக்கி இருப்பதாகவும் பிப்.,24ல் மத்திய அரசு கூறி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நாட்டில உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அந்த நாடுகளின் தலைநகரங்களான புகாரெஸ்ட், புதாபெஸ்ட் பகுதிகளில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications