மத்திய பட்ஜெட்: புத்துயிர் பெறுமா சென்னை- கடலூர்; செங்கல்பட்டு- மாமல்லபுரம் ரயில் பாதை திட்டங்கள்?
சென்னை: சென்னையில் இருந்து கடலூருக்கு மாமல்லபுரம் வழியாக கடலோர ரயில் பாதை அமைக்கும் திட்டம் 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது. தற்போதைய மத்திய பட்ஜெட்டிலாவது சென்னை- கடலூர் கடலோர ரயில் பாதை திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னையில் இருந்து மாமல்லபுர- புதுச்சேரி வழியாக கடலூர் வரையிலான 179 கிமீ தொலைவு கடலோர ரயில் பாதை திட்டம் அப்பகுதி மக்களின் பெருங்கனவுகளில் ஒன்று. இந்த கடலோரப் பகுதிகளில் ரயில் பாதைகள் எதுவுமே இல்லை என்பது வேதனைக்குரியதாகும். இதனால் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை- கடலூர் கடலோர ரயில் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து முதல் கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு கற்களும் ஊன்றப்பட்டன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக இத்திட்டம் கேட்பாரற்ற நிலையில் கைவிடப்பட்டதால் ரயில் பாதைக்காக ஊன்றப்பட்ட கற்களை அடர்புதர்களுக்கு நடுவே தேடுகிற பரிதாப நிலைதான் உள்ளது. சென்னை- கடலூர் ரயில் பாதை திட்ட மதிப்பீடு ரூ1,500க்கும் அதிகமாகும்.
ஆனால் வெறும் ரூ50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கும் இந்த திட்டத்துக்கு தற்போதைய மத்திய பட்ஜெட்டிலாவது போதுமான நிதி ஒதுக்கீடு செய்து புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
செங்கல்பட்டு- மாமல்லபுரம் ரயில் பாதை திட்டம்
இதேபோல செங்கல்பட்டு- மாமல்லபுரம் இடையேயான 26 கிமீ தொலைவையும் ரயில் பாதை மூலம் இணைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை. சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு ரயில் பாதையே கிடையாது என்பது எவ்வளவு துயரமானது என சுட்டிக்காட்டுகின்றனர் அப்பகுதி வர்த்தகர்கள். தற்போதைய பட்ஜெட்டில் செங்கல்பட்டு- மாமல்லபுரம் இடையேயான ரயில் பாதை திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக முடிக்க வேண்டும் என்பது மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications