சென்னை உள்பட பெருநகரங்களில்! 50 பிரமாண்ட காய்கறி சந்தைகள்.. மத்திய அரசு மெகா பிளான்! விவசாயிகள் குஷி
சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்பட 20 லட்சத்திற்கும் அதிகமாக வசிக்கும் பெரு நகரங்களில் பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் இது செயல்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவசாயிகளின் வேளாண் விளை பொருட்கள் சந்தைகளில் கொண்டு வருவதற்குள் பல்வேறு இடைத்தரகர்களை கடந்து வருகிறது. இதனால், பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் போதிய அளவு லாபம் கிடைப்பது இல்லை.

இதனை கருதில் கொண்டு நாட்டின் முக்கிய நகரங்களில் இடைத்தரகர்கள் தலையீடு எதுவும் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக நுகர்வோருக்கு காய்கறிகள் கிடைக்கும் வகையில், பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பெரிய நுகர்வு மையங்கள் அருகில் பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்கப்படும். கூட்டுறவு அமைப்புகள் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த காய்கறி சந்தைகள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். பட்ஜெட்டில் அறிவித்தபடி, நாடு முழுதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் 50 காய்கறி சந்தைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வரைவு திட்டத்தை வேளாண் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கேபினட் ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம்... திட்டத்தின் படி டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை ஒட்டி 50 கிலோ மீட்டர் தொலைவிற்குள் பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்கப்பட உள்ளதாம்.. காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு வசதி உள்ளிட்டவையும் இந்த காய்கறி சந்தைகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் குடியிருப்பு அருகேயே சில்லரை விற்பனை மூலமாகவும் வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகளை வாங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இடைத்தரர்கள் இன்றி விவாசய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு விவசாயிகளுக்கும் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவையும் பதுக்கல் குறைந்து வினியோகம் சீராக இருப்பதும் உறுதி செய்யப்படும். தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நகர்புறங்களுக்கு அருகில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications