2013-ல் அந்த முடிவை எடுத்தார்.. ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
சென்னை: முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான் பல்கலைக்கழங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும் என்று நினைத்துதான் 2013- ஆம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல்வர் என்று அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவரை நாம் மனதார பாராட்டலாம் என்று ஸ்டாலின் பேசினார்.
ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது:- இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்குதான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகமாக இது உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்குதான் மாநில முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் பேசவில்லை. எதார்த்தத்தை நான் பேசுகிறேன்.

முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான் பல்கலைக்கழங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துதான் 2013- ஆம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல்வர் என்று அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவரை நாம் மனதார பாரட்டலாம்.. இப்போ இருக்க கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
பாட்டு பாடிய ஸ்டாலின்: பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன்... வெளியூருக்கு இரவு நேரத்தில் காரில் பயணம் செய்யும் போது காரில் சுசீலாவின் பாட்டை கேட்டுக்கொண்டே செல்வேன். எனக்கு மிகவும் படித்த பாடல் " நீ இல்லாத உலகத்திலே...நிம்மதி இல்லை..
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.. காயும் நிலா.. வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை. உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை" என்ற பாடல் வரியை முதல்வர் பாடினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- இரண்டு இசைமேதைகளுக்கு முனைவர் பட்டம் கொடுத்து இருகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் புகழை பெற்றவர் சுசீலா..
நல்ல செய்தி வரும்: சுந்தரமும் பன்முகத்தன்மை கொண்டவர். இசைத்துறைக்கு அரிய தொண்டாற்றியவர். இசைத்துறையில் முக்கிய நூல்களை படைத்தவர். பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் நான் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கிற இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது. அதனால்தான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முதல்வரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
அதற்காக சட்ட முன்வடிவுகளையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் போகவிரும்பவில்லை. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்... வரவேண்டும் என எதிர்பார்ப்போம்.. மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க: கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். தமிழ்நாட்டிற்கு மட்டும் நான் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். கல்விதான் ஒருவரின் நியாயமான சொத்து. அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications