வரதட்சணைக்காக எனது திருமணத்தை நிறுத்த முயற்சித்தார் அப்பா... மனம் திறந்த டிராஃபிக் ராமசாமி..!
சென்னை: இளமைப் பருவம் தொடங்கி சட்டப் போராட்டங்களில் சந்திக்கும் சவால்கள் வரை ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்து பேசியுள்ளார் சமூக நலப் போராளி டிராஃபிக் ராமசாமி.
இதுமட்டுமல்லாமல் இப்போது சினிமாவில் நடிக்க தொடங்கியிருப்பது பற்றியும் விவரித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;
மன உறுதி
''அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடைசி வரை பிடிவாதத்தோடு செயல்பட்டு உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பதாலோ என்னவோ என்னை பிடிவாதக்காரர் என்று சிலர் சொல்வதுண்டு. எனக்கு 14-வது வயது இருக்கும் என நினைக்கிறேன், அப்போது அரசுப்பேருந்தில் ரேஷன் அரிசியை எடுத்து வந்த போது வட ஆற்காடு பகுதியை சேர்ந்த தாசில்தார் ஒருவர் நான் கொண்டு சென்ற அரிசியை பறிமுதல் செய்தார். நான் அரிசி பெற்றதற்கான ஆவணங்களை காண்பித்தும் அவர் அதை கேட்கவில்லை.
பணியிடை நீக்கம்
''அரிசியை வைத்துக் கொள்ளுங்கள், இதை நான் எப்படி பெற முடியும் என எனக்குத் தெரியும் என்று தாசில்தாரிடம் கூறிவிட்டு சென்னை வந்துவிட்டேன். கால் அனாவுக்கு போஸ்ட்கார்டு வாங்கி மாவட்ட ஆட்சியருக்கு நடந்த விவரங்களை சொல்லி கடிதம் எழுதினேன். இப்போதைய அதிகாரிகள் போல் இல்லை, அந்தக்கால அதிகாரிகள். புகார் கடிதம் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் எனது கடிதத்தை பார்த்த சென்னை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ததோடு என்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி பையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார்.''
பெருந்தன்மை
''இதையடுத்து அந்த தாசில்தார் தாம் செய்த தவறை உணர்ந்து அரிசியை தேடி வந்து கொடுத்ததுடன் மன்னிப்பும் கோரினார். இதையடுத்து தாசில்தார் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு அதே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன். 14 வயது சிறுவனுக்கு இவ்வளவு பெருந்தன்மையா என ஆட்சியரே பாராட்டினார். இது தான் எனக்கு விவரம் தெரிந்து நான் எழுப்பிய முதல் உரிமைக் குரல்.''
நேர்முக உதவியாளர்
இளமைப்பருவத்தை பொறுத்தவரை சினிமா மீது சற்று ஆர்வம் இருந்தது. இதனால் ஒன்றிரண்டு படங்களில் நடித்தேன். பிறகு ராஜாஜி அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வெங்கிடசாமி நாயுடுவிடம் நேர்முக உதவியாளராக இருந்தேன். அப்போது என்னை வீட்டில் சம்பத் என்று தான் அழைப்பார்கள். எனது அப்பா காங்கிரஸ் நிர்வாகியாக இருந்ததால் ராஜாஜியோடு நெருக்கமாக இருந்தார். ஒரு முறை ராஜாஜி எனது வீட்டிற்கு வந்தபோது, சம்பத் உனது முகத்தை பார்த்தால் நீ ஒரு நாள் பெரிய ஆளாக வருவாய் என எனக்கு தோன்றுகிறது என என்னிடம் கூறினார்.
அப்பா தொந்தரவு
''திருமணத்தை பொறுத்தவரை 1,500 ரூபாய் வரதட்சணை கேட்டு எனது மாமனாரிடம் தொந்தரவு செய்தார் எனது அப்பா. எனது மாமனாரால் 1,500 ரூபாய் வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் திருமணத்தை நிறுத்த முயற்சித்தார் அப்பா. திருமண அழைப்பிதழை தூக்கி எறிந்ததோடு இந்த திருமணம் நடக்காது என கூறிவிட்டார் அப்பா. அப்போது இது குறித்து கண்ணீர் மல்க என்னை சந்தித்து கூறினார் எனது மாமனார். தைரியமாக போங்க இந்த திருமணம் நடக்கும் எனக் கூறி அனுப்பி வைத்தேன்''.
திருப்பதியில் திருமணம்
''அதன்படி திருப்பதியில் வைத்து நிச்சயித்த பெண்ணோடு அப்பாவை மீறி திருமணம் செய்துகொண்டேன். அந்த திருமணத்துக்கு எனது மூன்றாவது தம்பியும் அம்மாவும் மட்டும் வந்திருந்தார்கள். என்னுடன் பிறந்தவர்கள் 10 பேர். அன்று வெளியேறியவன் தான், இன்று வரை தனியாக தான் வாழ்கிறேன். நான் இந்தளவு சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதற்கு எனது மனைவியும் ஒரு காரணம். அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் என்னால் இது சாத்தியமல்ல.''
சட்டப்போராட்டம்
''இது வரை 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்திருக்கிறேன். பல வழக்குகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் வந்துள்ளன. பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அப்படி தள்ளுபடி செய்யப்படும் வழக்குகளில் கூட அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துவிட்டு தான் தள்ளுபடி செய்யும். சட்டப்போராட்டங்கள் காரணமாக என் மீது பல பொய் வழக்குகளும் பதியப்பட்டன.''
சோழிங்கநல்லூர்
''வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை சோழிங்கநல்லூர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவசேனாவும் என்னை ஆலோசகராக இருக்கச் சொல்கிறது. நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்க இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்க என்பது தான் நான் பொதுமக்களுக்கு வைக்கும் கோரிக்கை.''
நடிப்பு
''இப்போது சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் 4 சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறேன். காசு வாங்காமல், மேக்கப் போடாமல், நடிக்கும் நடிகன் நானாக தான் இருப்பேன்.ஒரு படத்தில் பவர் ஸ்டார் எனக்கு ஜீனியராக நடிக்கிறார், அவருக்கு நான் லீடர். ஏப்ரல் மாதம் எனது பிறந்தநாளன்று 2 திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.''