மீண்டும் இந்தி திணிப்பு? UPSC முதல்நிலை தேர்வு - சென்னையில் இந்தி மொழியில் வழிகாட்டு நெறிமுறைகள்!
சென்னை: சென்னையில் UPSC முதல்நிலை தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் கடந்த 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பல்வேறு தேர்வு மையங்களில் எழுத்து முறையில் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 24,364 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு - முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வு தகுதித் தேர்வு ஆகும். அதில் தேர்ச்சி பெறும்பட்சம் முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகப்பெரிய சவால்.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடந்து வரும் நிலையில் சென்னை மண்ணடியில் UPSC முதல்நிலை தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் இல்லாமல் இந்தி மொழியில் வழிகாட்டு நெறிமுறைகள் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.












Click it and Unblock the Notifications