கோடி கோடியாய் காசு இருந்தும் நிம்மதி இல்லை.. குழந்தைக்காக போராடும் கணவன் - மனைவி! மாறி மாறி வீடியோ!
சென்னை: தனது மகனை கடத்தி விட்டதாக அமெரிக்க வாழ் தமிழரான பிரபல தொழிலதிபரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தனது மகன் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவரது கணவர். அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் கொடிகட்டி பறந்தவர் குடும்ப விவகாரத்தில் சிக்கி தவிக்கும் நிகழ்வு குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது..
சென்னையைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களை நடத்தி வருகிற மிக பெரும் கோடீஸ்வரர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் சில நாட்களில் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். இந்த நிலையில் அமெரிக்க சட்டப்படி பிரிந்து வாழ முடிவெடுத்த அவர்கள் நான்கு நாள் குழந்தை தாய் உடனும் மூன்று நாள் தந்தையுடனும் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சொத்துக்களை பிரிப்பதற்காக தம்பதியினர் சென்னை வந்திருக்கின்றனர். அப்போது அந்த குழந்தை திவ்யாவுடன் இருந்திருக்கிறது. இந்த நிலையில் பிரசன்னாவின் உதவியாளர் எனக் கூறி ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து குழந்தையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விட்டதாக திவ்யா திருமங்கலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்தார். பதில் தனது கணவர் திட்டமிட்டு தனது குழந்தையை கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தையை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.

இது தொடர்பாக வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் குழந்தை தன்னிடம் பத்திரமாக தான் இருக்கிறது என வீடியோ வெளியிட்டு இருக்கிறார் பிரசன்னா. நீதிமன்ற உத்தரவுப் படி தனது குழந்தையை உதவியாளர் கோகுல கிருஷ்ணன் என்பவரிடம் சில வாரங்களுக்கு முன்பு திவ்யா கொடுத்து அனுப்பியதாகவும், ஆனால் குழந்தையை திரும்ப பெற்றுக் கொள்ளாமல் திவ்யா போலீசாரிடம் பொய் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது கோகுலகிருஷ்ணனை பெங்களூரில் போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர் என பிரசன்னா சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். குழந்தையை வைத்து தாயும் தந்தையும் மாறி மாறி வீடியோ போட்டு புகார்களை அள்ளி வீசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications