முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்.. நடிகர் சிலம்பரசன் தாயார் உஷா பரபரப்பு பேட்டி
சென்னை: சிலம்பரசன் படத்தை வெளியிட விடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் கூட இருக்க தயாராக இருப்பதாக சிலம்பரசன் தாயார் உஷா டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் சிலம்பரசன் படம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உஷா கூறுகையில், "தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் AAA என்ற ஒரு படம் எடுத்திருந்தார்.
அந்த படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த நஷ்டத்தை மைக்கேல் ராயப்பன்தான் தரவேண்டும். ஆனால் நடிகர் சிலம்பரசன் தான் தரவேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒவ்வொரு முறையும் சிலம்பரசன் படங்களில் நடிக்க ஆரம்பிக்கும் போதும் பஞ்சாயத்துக்கு எங்களை கூப்பிட்டு பல கோடிகளை பெற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிப்பதற்கு அனுமதிக்கிறார்கள். அதேபோல முடியும் பொழுதும் படத்தை வெளியிடுவதற்கு ரெட் என்ற பெயரில் படத்திற்கு தடைப் போட்டு பல கோடி தர வேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.

தமிழ் திரைப்பட நடப்பு
இப்பொழுது புதியதாக அருள்பதி என்பவர் தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து ஒரு இருபது, இருபத்தைந்து பேர் வைத்து சிலம்பரசனை எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். பக்க பலமாக எங்கள் பக்கம் அரசாங்கம் இருக்கிறது, அப்படின்னு ஒரு மாயையை ஏற்படுத்த இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம்
இந்த அரசாங்கம் நல்லமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அரசாங்கத்திற்கு கலங்கம் விளைவிக்க கூடிய வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றனர். இதை முதல்வர் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்வோம். அதற்காக அவருடைய வீட்டு வாசலிலும் உண்ணாவிரதம் இருப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

நடிகர்கள்
இதுபோன்று கட்டப் பஞ்சாயத்தால் பல தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள், நடிகர்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்காக இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார். நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன். சிலம்பரசன் நிஜமாகவே யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் யாருக்கும் தர வேண்டிய நிலைமை இல்லை என தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்
தொடர்ந்து பேசிய டி ராஜேந்திரன், "ரெட் என்று தெரிவிப்பதற்கு எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் என்று எதுவுமில்லை. AAA நடிகர் சிலம்பரசன் நடித்து மட்டுமே கொடுத்தார். திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரின் பிரச்சனையாகும். ஒரு படம் நஷ்டம் ஏற்பட்டால் நடிகருடன் எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?

தோல்வி
வெற்றி பெற்றால் நடிகரை சம்பந்தப்படுத்துகிறார்களா. சிலம்பரசனுக்கு மட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. கோடம்பாக்கத்தில் கட்டப்பஞ்சாயத்து கோட்டையாக மாற்றி வருகிறார்கள். கடந்த ஆட்சியிலும் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்கள். இந்த ஆட்சியிலும் அதிகமாக செய்ய நினைத்து செயல்பட்டு வருகின்றனர். திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாததால் தான் பல படங்கள் ஒடிடி தளங்களுக்கு செல்கிறது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications