"கரூர் துயரச் சம்பவத்துக்கு தவெக தான் காரணம்.. தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டு”.. வைகோ ஆவேசம்
சென்னை: கரூர் துயரச் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம்தான் காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 10.30 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு இரவு 7 மணிக்குதான் கரூர் எல்லைக்கே விஜய் போயிருக்கிறார் என வைகோ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவத்திற்கு தவெகவே பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ "கரூர் துயரச் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம்தான் காரணம். 10.30 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு இரவு 7 மணிக்குதான் கரூர் எல்லைக்கே விஜய் போயிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து வந்த தொண்டர்களால் ஏற்கனவே இருந்த கூட்டம் இரு மடங்கு ஆகி இருக்கிறது.
காத்துக்கிடந்த பெண்கள், குழந்தைகள் கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கும் என எச்சரிக்கையாக இருந்து விஜய் செயல்பட்டிருக்க வேண்டும். தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீதும், சட்டமன்ற உறுப்பினர் மீதும், மறைமுகமாக முதலமைச்சர் மீதும் தாக்குதலை தொடுக்கிறார்கள். தவெகவினர் திமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த சம்பவத்தில் எந்தவித சதியும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை" என்று தெரிவித்தார்.
வைகோ மேலும் பேசுகையில், "கூட்டம் நடத்தும்போது, என்னென்ன நடக்கும் என்ற முன்னெச்சரிக்கை பயம் வேண்டும். விஜய் ஆரம்பத்திலேயே வாகனத்தில் ஏறி கை அசைத்து ரசிகர்களை கலைந்து செல்ல வைத்திருந்தால், இந்த நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தவெக தவறிவிட்டது. இதற்கு திமுகவை குறை சொல்வது நியாயமற்றது" என்றார்.
மேலும், உடல்நிலை காரணமாக கரூருக்கு செல்ல முடியவில்லை என்று கூறிய வைகோ, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் 'புரட்சி வேண்டும்' என்ற பதிவை கடுமையாக கண்டித்தார். ஆதவ் அர்ஜுனாவின் 'அரசுக்கு எதிராக புரட்சி' என்ற பதிவு, பொறுப்பற்ற முறையில் பொதுமக்களை தூண்டுவதாக உள்ளது என்று வைகோ விமர்சித்தார். "பாரதியின் வார்த்தைகளை இப்படி தவறாக பயன்படுத்துவது அவரது மதிப்பைக் குறைக்கும் செயல்" என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது தவெகவின் நிர்வாகிகள் என்று வலியுறுத்திய வைகோ, "கூட்டத்தை கட்டுப்படுத்துவது கட்சியின் கடமை. தவெகவினர் இதில் தோல்வியடைந்து, பிறரை குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கது அல்ல. தவெக தலைவர் விஜய் திருச்சியிலேயே தங்கியிருக்கலாம். மறுநாள் எந்தவிதத்தில் ஆறுதல் சொல்வது என முயற்சித்திருக்கலாம்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மீது தடியடி நடத்தவில்லை கூட்டத்துக்குள் போலீஸ் தடியடி நடத்தி இருந்தால் தடியை பிடுங்கி போலீஸை பந்தாடி விடுவார்கள். அப்படியெல்லாம் செய்யவே முடியாது. போலீசார் தடியடி நடத்தியதாக ஒரு காட்சியை கூட நான் பார்க்கவில்லை" என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications