"கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்துள்ளார் விஜய்”.. வைகோ அட்டாக்!
சென்னை: "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்" என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். நவம்பர் 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பின் 38 நாட்களுக்குப் பின் மௌனம் கலைத்தார். இந்தக் கூட்டத்தில், விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்.

விஜய் தனது பேச்சில், "கரூர் சம்பவத்தால் நாங்கள் அளவிட முடியாத வலியில் இருக்கிறோம். அப்போது நாங்கள் அமைதியாக இருந்தபோது, அரசு நம்மைச் சொல்ல முடியாத வெறுப்பு, அவதூறு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் கூட இது விவாதிக்கப்பட்டது" என்று கூறினார். அவர், கூட்டத்தின் போது அரசு அனுமதிகளை தாமதப்படுத்தி, பொதுக்கூட்டங்களைத் தடுத்ததாகவும், கரூரில் மட்டும் இத்தகைய சம்பவம் ஏற்பட்டதற்கு அரசின் பொறுப்பு உள்ளது என்றும் கூறினார். அது மட்டுமின்றி, 2026 தேர்தலில் திமுகவுடன் நேரடி போராகும்" என அவர் சவால் விடுத்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ, தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக பேசியுள்ளார். கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என வைகோ விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்தது பற்றியும் பேசியுள்ளார்.
வைகோ பேசுகையில், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார் விஜய். இது யாரும் செய்யாத பித்தலாட்டம் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்; கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்." என விமர்சித்துள்ளார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விஜய்யின் பேச்சை கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதில், "பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழு காரணமான அவர், பொறுப்பற்று திசைதிருப்புகிறார். ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போல கனவுலகத்தில் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார், ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிவிடும்.
கரூரில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய், தரம் தாழ்ந்த முறையில் திசைதிருப்ப, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது வெறுப்பையும் கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் விஜயின் கட்சியினர் பொறுப்பற்று செயல்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உண்மையான ஆதங்கம் இல்லாமல் அரசியல் செய்கின்றனர். இனிமேல் இதுபோன்ற அரசியல் நாகரிகமின்றி பேசக்கூடாது என்று வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications