அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்- பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்- வைகோ
சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 ஆவது நாளில், அனைத்து சாதியினரும், இந்துமத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையை தமிழக மக்களுக்கு சமத்துவப் பரிசாக தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி உள்ளார்!

மகிழச் செய்த நிகழ்ச்சி
சென்னை மைலாப்பூரில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு குமரகுருசுவாமிகள், சுகிசிவம், திருமதி தேசமங்கையற்கரசி முதலான இந்துமத சான்றோர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்கு, பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காட்சி நம்மையெல்லாம் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதக்கச் செய்தது! மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராக பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி "போற்றி, போற்றி" என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மை பெரிதும் பரவசம் கொள்ளச் செய்துவிட்டது.

பெரியாரின் போராட்ட அறிவிப்பு
அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை - அமைதிப் புரட்சியை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970 ஆம் ஆண்டு குடியரசு நாளான சனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்ததை ஏற்று, பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், தி.மு.கழகமும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக 16.12.1975 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனாலும் முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வரவில்லை. தந்தை பெரியார் மறைந்தபோது, "இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்" என்று கண்ணீர்மல்க குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர்!

மு.க.ஸ்டாலின் சமத்துவ புரட்சி
அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அமைதிப் புரட்சியை - சமத்துவப் புரட்சியை - இரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்கு பறைசாற்றியுள்ள தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் கனிந்த - இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்!. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications