மதிமுகவுக்கு 1 தொகுதி? கறார் காட்டும் திமுக! வைகோ கடும் அப்செட்! அடுத்தது என்ன?
சென்னை: நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு 1 தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்க முன் வந்துள்ளதால் வைகோ கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மதிமுகவை பொறுத்தவரை 2+1 என்ற ரீதியில் இரண்டு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் கேட்கிறது. திமுகவோ ஒரு மக்களவைத் தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் எனக் கறார் காட்டுகிறது. இதனால் பேசாமல் தேர்தலில் போட்டியிடாமலேயே திமுகவுக்கு ஆதரவு கொடுத்தால் என்ன என்ற ரீதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ யோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வைகோவை பொறுத்தவரை முன்பு போல் இல்லாமல் இப்போது ஓரளவு பொறுமையும், நிதானமும் காத்து வருகிறார்.

இதே பழைய வைகோவாக இருந்தால் 1 தொகுதியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் எனக் கூறிவிட்டு தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பார். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு கட்சியின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சோர்வடையச் செய்யும் என்பதால் திமுகவிடம் குறைந்தபட்சம் 2 தொகுதிகளையாவது கேட்டு வாங்கிவிட மதிமுக இன்னும் போராடி வாதாடி வருகிறது. மதிமுகவுக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வராததற்கு காரணம், மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்திருப்பதே ஆகும்.
ஒரு வேளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக தலைமை ஒப்புக்கொண்டால் 2 தொகுதிகள் திமுக ஒதுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மதிமுக சார்பில் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுவினர் தான் திமுகவுடன் பேசி வருகின்றனர். கடைசிக்கட்டமாக வைகோ அல்லது துரை வைகோ நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. மதிமுகவை பொறுத்தவரை திருச்சி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வருகிறது.
ஒரே ஒரு சீட்டை திமுகவிடம் வாங்கி அதில் துரை வைகோவை போட்டியிட வைத்தால், தனது மகனுக்கு மட்டும் சீட் வாங்கிக் கொடுத்துவிட்டார் வைகோ என்ற விமர்சனம் எழும் என்பது வைகோவின் எண்ணவோட்டமாக உள்ளது. இதனால் தான் 2 தொகுதிகளை கேட்டு வாங்கி ஒன்றில் துரை வைகோவையும், மற்றொரு தொகுதியில் கட்சியின் முக்கிய முன்னணி நிர்வாகி ஒருவரையும் களமிறக்க விரும்புகிறார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக இருப்பதால் தான் நேற்றைய தினம் தொகுதி பங்கீடு உடன்பாடு சுமூகமாக நடைபெறவில்லை. இன்று மாலையோ நாளையோ இந்த விவகாரத்தில் இறுதி முடிவு தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி எம்.பி.ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications