தெற்காசியாவின் ரத்த ஓட்டமே சீர்கெட்டுப்போகும்.. மூளும் போர் நிறுத்தப்பட வேண்டும்- கவிஞர் வைரமுத்து
சென்னை: மத்திய கிழக்கில் 4வது நாளாகப் போர் தொடர்கிறது. இதனால் பல லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் என்பது மனிதக் குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் எனக் கூறியுள்ள கவிஞர் வைரமுத்து, எல்லா மனிதரும் போருக்கு எதிரான பதாகையாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது. இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். கமேனி மரணத்தை முதலில் ஈரான் மறுத்தாலும் கூட பிறகு ஈரானும் அதை உறுதி செய்தது.

இஸ்ரேல் ஈரான் விவகாரம்
கமேனி மரணத்தால் கொந்தளித்த ஈரான், இப்போது பதிலடியை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் படைகள் நேரடியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அதேபோல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளில் அமெரிக்காவின் படைகள் இருக்கும் சூழலில், அந்த இடங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து
இதற்கிடையே கவிஞர் வைரமுத்து போருக்கு எதிரான கவிதையைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். போர் ஏற்பட்டால் ஒவ்வொரு வீட்டு உண்டியலும் களவாடப்படும் எனக் கூறியுள்ள வைரமுத்து, மூளும் போர்.. நீளும் போராக இல்லாமல்.. நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர் வேண்டாம்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "
போர் என்பது
மனித குலத்தின்
சமநிலையைச் சாய்த்துவிடும்
மனிதர்களின்
தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்
அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்
பைத்தியக்காரன் இழுக்கும்
நேர்கோடு
எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான்
நமது சாப்பாடும் தூக்கமும்
ஏதோ ஒரு நாட்டின்
நகர்வோடு
முடிச்சுப் போடப்பட்டுவிட்டது
ஈரானின் "ஹோர் முஸ்"
நீரிணை மூடப்பட்டுவிட்டால்
தெற்காசியாவின்
ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும்
ஒவ்வொரு வீட்டு உண்டியலும்
களவாடப் படும்
மூளும் போர்
நீளும் போராக இல்லாமல்
நிறுத்தப்பட வேண்டும்
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில்
நாற்காலிகளில் ஏறிநின்று
பேசவேண்டும்
'போர் ஒழிக'
இல்லையேல்
ஒவ்வொரு நாட்டுச் சூரியனும்
மூடப்படும்
தொலைக்காட்சிகளின்
போர்க் காட்சிகளை
வாண வேடிக்கையென்று
காணவேண்டாம் யாரும்
அதுவே
சொந்த வீதியில் நடந்தால்
என்னவாகும் என்று
எண்ணிப் பாருங்கள்
எல்லா மனிதரும்
போருக்கு எதிரான
பதாகையாக வேண்டும்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications