மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்! மத்திய அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்!
சென்னை: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என கவிஞர் வைரமுத்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரை பொறுத்தவரை அவர் ஒரு தேசிய பெரும் தலைவர் என்றும் அவரை குறிப்பிட்ட சமுதாயத் தலைவராக மட்டும் கருத தேவையில்லை எனவும் கூறியிருக்கிறார்.
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அவர் இதனைக் கூறினார்.

முத்துராமலிங்கத் தேவர்
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பசும்பொன் என்பது தேவர் பிறந்த ஊர்மட்டுமல்ல அவரது குணம், தியாகம், நேர்மைக்கு இலக்கணமாக திகழும் சொல் பசும் பொன் என புகழாரம் சூடினார். முத்துராமலிங்கத் தேவரை சாதிய சிமிழுக்குள் அடைக்கக் கூடாது என்பது தனது விருப்பம் எனக் கூறினார்.

தேசிய பெரும் தலைவர்
முத்துராமலிங்கத் தேவரை பொறுத்தவரை அவர் ஒரு தேசிய பெரும் தலைவர் என்றும் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய பெரும் துணை புரிந்து நின்றவர் தேவர் பெருமகனார் என்றும் வைரமுத்து புகழாரம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சாதிய அடையாளங்களை கடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் தன்னையும், மண்ணையும், மக்களுக்காக கொடுத்தவர் தேவர் பெருமகனார் எனவும் வைரமுத்து பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையம்
முத்துராமலிங்கத் தேவரின் தியாகங்களை நாம் நினைவு கூர வேண்டும் என்றும் பொதுவாழ்வுக்கு வரும் ஒவ்வொருவரும் தேவர் பெருமகனாரின் தியாகங்களை அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் தான் அதற்கு உரியவர் எனவும் வைரமுத்து மத்திய அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டினால் 6.5% விழுக்காடு சமுதாயம் மட்டுமல்ல அதை தாண்டிய சமுதாயங்களும் வரவேற்கும் எனக் கூறினார்.

மிகவும் வெளிப்படையாக
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது. இதனிடையே 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முக்கிய முடிவு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications