எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து சென்றது நல்லதா போச்சு.. கருணாநிதி சொன்ன ரகசியத்தை உடைத்த வைரமுத்து
சென்னை: எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து சென்றது நல்லதா போச்சு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னிடம் சொன்னதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார்.
சென்னை மயிலாப்பூரில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞரோடு நான் என்ற இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில் எம்ஜிஆர் திராவிட கட்சியிலிருந்து விலகியது குறித்து என்றாவது வருந்தியதுண்டா என கருணாநிதியிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் அது ஒரு வகையில் நல்லதா போச்சு! ஏனென்றால் எம்ஜிஆர் மட்டும் திராவிட கட்சியை உடைத்துக் கொண்டு வேறொரு இயக்கத்தை தொடங்காவிட்டால் அந்த இடத்திற்கு வடமாநிலத்திலிருந்து அன்னிய சக்தி வந்திருப்பார்கள் என்றார்.
ஒரு அன்னிய சக்தி தமிழகத்தில் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்றால் திமுக மட்டும் தாண்டி வர முடியாது. அண்ணா திமுகவையும் சேர்த்து தாண்டி வர வேண்டும். எங்களுக்கு அதிமுக ஒரு தடுப்பணை, திமுக ஒரு மேட்டூர் பேரணை. இந்த தடுப்பணை, பேரணையை தாண்டிதான் அன்னிய சக்தி உள்ளே வர முடியும். கருணாநிதிக்கு எவ்வளவு தீர்க்கதரிசனம்.
கலைஞரோ ஒருவர் 15 நிமிடங்கள் பேச முடியுமா. அவருடன் 35 ஆண்டுகள் நான் பழகியுள்ளேன். அவருடன் பேசுவதற்கு என்னை தயாரித்து தயாரித்து அவருக்கு நான் ஒரு சீடனாகிவிட்டேன். அவருடன் பேசுவதற்கே அத்தனை ஆசையாக இருக்கும். என்னுடைய குளியலறையில் தொலைபேசியை சேர்த்து வைத்ததே கலைஞருடன் பேசுவதற்காகத்தான்.
எனக்கு அவர் போன் செய்தால் பல நேரங்களில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு சோப்பு நுரையை துடைத்துக் கொண்டு நான் கலைஞருடன் பேசியுள்ளேன். அவருடன் பேசியதில் அந்த சோப்பு என் தோலுடன் ஒட்டிக் கொள்ளும். அதை கழுவுவதற்கு சீயக்காய் போட வேண்டும். அவருடன் பேசினால் நேரம் போவதே தெரியாது.
பிள்ளைகள் மீது அவர் பேரன்பு வைத்திருந்தார். பிள்ளைகளோ அவருடன் அச்சத்துடன் பழகினார்கள். மரியாதையுடன் பழகினார்கள். ஒரு நாள் நானும் கலைஞரும் மேல் தளத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கீழே ஸ்டாலின் காத்திருந்தார். 30 நிமிடங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டாலின் காத்திருக்கும் விஷயம் எனக்கு தெரியாது.
உடனே மேலே இருந்து கீழே காலிங் பெல் அடித்தார் கலைஞர். அப்போது சண்முகநாதனிடம் என்னை பார்க்க யாராவது கீழே காத்திருக்கிறார்களா என கேட்டார். அதற்கு சண்முகநாதன், ஸ்டாலின் அரை மணி நேரமாக காத்திருக்கிறார் என்கிறார். அதற்கு கருணாநிதி, என்ன மேலும் அவர் காத்திருக்கிறேன் என்கிறாரா என கேட்டதற்கு சண்முகநாதன் இல்லை அய்யா அவர் போகிறேன் என்கிறார்.
அதற்கு கருணாநிதி, மேலே வந்து முகத்தையாவது காட்டிட்டு போக சொல்லுங்க என கருணாநிதி கூறினார். இது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ஸ்டாலின் மீது அவருக்கு எவ்ளோ பாசம் இருந்திருக்கு பாருங்க. ஸ்டாலினுக்கு எத்தனை நாகரீகம் பாருங்க! அப்பாவும் வைரமுத்துவும் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நாம் முட்டுக் கட்டை போடக் கூடாது என்ற நாகரீகத்தை சொல்வதா இல்லை , கலைஞரின் பாசத்தை கூறுவதா. இரண்டுக்கும் இடையே மெல்லிய வித்தியாசம்தான். பிறகு ஸ்டாலின் மேலே வந்து பார்த்துவிட்டுத்தான் சென்றார் என வைரமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications