ஓபிஎஸ் கையில் கிடுக்கிபிடி?.. சுக்குநூறாகும் மாஸ்டர் பிளான்?.. புட்டு புட்டு வைத்த வைத்திலிங்கம்
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாக்க முடியுமா முடியாதா கட்சியின் பைலா என்ன சொல்கிறது என்பது குறித்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வியூகங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக வரும் 23 ஆம் தேதி ஒற்றைத் தலைமை குறித்து தனித்தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பிரச்சினை எழுந்துள்ளதால் இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வைத்திலிங்கம்
அந்த கடிதத்தை துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு படித்து காட்டினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ்ஸுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால்தான் பொதுக் குழுவை ஒத்தி வைக்க கோருகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஆதரவு இருக்கு
இதற்கு வைத்திலிங்கம் பதில் அளிக்கையில், சட்டவிதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு 3 மாதங்கள்தான் ஆகிறது. ஆதரவு இருந்ததால்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 15 மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகவும் மேலும் 15 மாவட்டச் செயலாளர்கள் நடுநிலையாக இருப்பதாகவும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

தொண்டர்களின் ஆதரவு
இது எல்லாவற்றுக்கும் மேல் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று இன்று நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பொதுக் குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

பொதுக் குழு
பொதுக் குழு நடத்த வேண்டும் என்றால் அஜெண்டாவை அனுப்ப வேண்டும். அதுதான் சட்டவிதி. அதையும் இன்னும் அனுப்பவில்லை. ஜெயலலிதா விரும்பியது போல் 100 ஆண்டுகாலம் இந்த கட்சி இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என அவர்கள் நினைப்பதால் பொதுக் குழு ஏற்பாடுகளை பார்க்க சென்றுள்ளார்கள்.

பைலா என்ன சொல்லுது
அதிமுக பைலா படி ஒற்றைத் தலைமை என கொண்டு வர முடியாது. பொதுக் குழு அஜெண்டாவை குழு கூடி அனுப்பி வைப்பார்கள். இதில் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட வேண்டும். ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்தில்லாமல் அதிமுக பைலா படி ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் கொண்டு வரவே முடியாது.

தனித்தீர்மானம் கொண்டு வர முடியுமா
சட்டவிதிகளின் படி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் எந்த முடிவும் எடுக்க முடியும். இதில் விதிகளை நீக்கவோ குறைக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்றார் வைத்திலிங்கம். எனவே ஓபிஎஸ்ஸை மீறி எடப்பாடி தரப்பால் தனித்தீர்மானம் கொண்டு வரவே முடியாது என்பதுதான் நிதர்சனம் போல!












Click it and Unblock the Notifications