விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை.. சீமானுக்கு போலீஸார் சம்மன்.. இன்று ஆஜராகவில்லை.. என்னாச்சு?
சென்னை: விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை விஜயலட்சுமி தான் 2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுடன் பழக்கம் ஏற்பட்டது என்றார். இதையடுத்து தன்னை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால் திடீரென தன்னைவிட்டுவிட்டு 2013 இல் கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த புகாரை அவர் 2011 லேயே கொடுத்துவிட்டார். இந்த 12 ஆண்டுகளாக அவ்வப்போது இந்த புகார்கள் வரும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமானை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை காவல் நிலைய ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதையடுத்து விஜயலட்சுமியை திருவள்ளூர் போலீஸார் வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் சீமானோ விஜயலட்சுமியை பற்றி திரும்ப திரும்ப பேச எனக்கு அவமானமாக இருக்கிறது என்றார். ஒவ்வொரு முறையும் விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதும் சீமான் கொநதளித்தபடியே பேசினார். மேலும் தான் லட்சியத்தை நோக்கி பயணிப்பதை இந்த இரு லட்சுமிகளை வைத்து தடுக்க நினைக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்றால் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் அல்லவா, ஏன் இதுவரை ஒரு போட்டோவை கூட காண்பிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் விஜயலட்சுமி இது போன்ற புகாரை இதுவரை 6 பேர் மேல் கொடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு விஜயலட்சுமி கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் தனக்கு பல முறை கட்டாய கருக்கலைப்பை சீமான் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் நடந்த போது சீமான் என்னுடன்தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் விஜயலட்சுமிக்கு மருத்துவம பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து சீமான் நீலகிரிக்கு கட்சி பணி விஷயமாக சென்றிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்படுகிறார் என்றெல்லாம் கூறியிருந்தனர். ஆனால் தனக்கு எந்த வாரண்டும் வரவில்லை, நான் ஏன் விசாரணைக்கு பயப்பட போகிறேன், நாமெல்லாம் பயப்படுற ஆளா என கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி இன்று சீமான் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வளசரவாக்கம் போலீஸார் முன்பு அவர் வேறு ஒரு தேதியில் ஆஜராகிறார் என்றும் சீமான் தரப்பினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications