பத்தாது பாட்டலு நான் குடிக்க.. அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க! சொல்லுங்க விஜய்! பாயிண்ட் பிடித்த வானதி
சென்னை: தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் அதிகமாக இருப்பது தனக்கு வேதனையாக இருப்பதாக கூறும் நடிகர் விஜய், தனது படங்களில் மது குடிப்பது போன்றும் சிகரெட் பிடிப்பது போன்றும் காட்சிகளை எடுப்பது ஏன் என்பதை அவர் நிச்சயமாக சொல்ல வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் போதை பழக்கம் அச்சமாக இருப்பதாகவும் தமிழகத்தில் நல்ல ஒரு அரசியல் தலைவர் இல்லை என்று விஜய் கூறியிருந்ததை குறித்து கேட்கிறீர்கள். நல்ல தலைவர்கள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சமுதாயத்திற்காக பேசுகிற மக்களுக்காக உழைக்கிற நல்ல தலைவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் வரவேற்பார்கள். நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும் என சொன்னால் அதற்காக அரசியல் கட்சிகளும் பணிகளை செய்கிறார்கள். விஜய்யும் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
அவர் நல்ல தலைவராக இருக்க என்னென்ன முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறுவார் என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் சொல்கிறார். அப்படி பார்த்தால் 70 சதவீதம் பேர் படித்தவர்கள். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய அம்சமாக இருந்தது.
ஆனால் இன்று தமிழகத்தின் கல்வியறிவு, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் என்பதை பார்த்தாலே தெரிந்துவிடும். நம் சட்டசபையிலேயே ஒரு டிகிரி வாங்கியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். படித்தவர்கள் என்பதைவிட மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள்தான் வேண்டும்.
படித்தவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள், சுயநலத்திற்காக வாழ்கிறார்கள். இதை எல்லாம் பார்த்திருக்கிறோம், ஆனால் இன்று என்ன தேவை என்றால் தியாக மனப்பான்மையுடன் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்காக வேலை செய்பவர்கள்தான் முக்கியம். அதை நோக்கி விஜய் செல்வார் என்றால் பார்க்கலாம்.
போதை பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படும் விஜய், சினிமாவில் சிகரெட் பிடிக்கிறார், மது குடிக்கிறார் என்கிறீர்கள். சினிமாவின் ஆதிக்கம் இளைஞர்கள் மீது இருப்பது வாஸ்தவம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. சினிமா நடிகர்கள் எல்லாம் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போது அவர்கள் எல்லாம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அரசியல் தலைவராக மாறிய பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். 3 கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்த 3 சட்டங்களில் நாம் பார்க்க வேண்டியது விரைவான நீதி, கால சூழலுக்கேற்ப தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நீதி, சட்டத்தினுடைய பல்வேறு ஷரத்துக்களை இன்றைய கால சூழலுக்கேற்ப நிறைய மாற்றியமைப்பது இதைத்தான்.
அந்த சட்டங்களின் பெயரை படிப்பதற்கு இந்தி, சமஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இது குறித்து எங்கள் கருத்துகளை மத்திய பாஜக தலைமையிடம் தெரிவித்திருக்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ 10 லட்சம் நிவாரணம்,. இதே பட்டாசு வெடித்து உயிரிழந்தால் அவர்களுக்கு வெறும் ரூ 3 லட்சம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நல்ல விஷயம்தான்.
உயிர் என்றால் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான். வாழ்வாதாரமும் அப்படித்தான்! இது நியாயமான கேள்வி, நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications