தமிழிசையை தொடர்ந்து.. வானதி ஸ்ரீனிவாசனுக்கு மிக பெரிய பதவி வெயிட்டிங்?.. பரிந்துரைத்தாரா நட்டா?
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு முக்கிய பதவியை வழங்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதில ஒருவர் தமிழிசை , மற்றொருவர் வானதி ஸ்ரீனிவாசன்.
பாஜகவில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் பெரிய பதவி கிடைக்கும் என்பது நிர்வாகிகளின் நம்பிக்கையாகும். தமிழகத்தை பொருத்தமட்டில் அவர்கள் உதாரணமாக சொல்வது தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோரைத்தான்.
தமிழிசை சவுந்திரராஜன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுடன் இணக்கமான போக்கை கையாண்டார். தனது விடா முயற்சியால் மக்களுக்கு பாஜகவையும் அதன் கொள்கைகளையும் புரிய வைத்தார்.

2021 ஆம் ஆண்டு தேர்தல்
இவரது பிரச்சாரத்தால் பாஜக பொதுக் கூட்டங்களுக்கு கட்சியினர் அல்லாதோரும் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்ல ஓரளவுக்கு தமிழிசை கோடு கிழித்திருந்தார். அவர் தெலுங்கானா ஆளுநர் என்ற உயரிய பதவியை அடைந்ததால் அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

எல் முருகன்
இதையடுத்து எல் முருகன் அந்த பதவிக்கு அமர்த்தப்பட்டார். தமிழிசை போட்டு கொடுத்த கோட்டை வைத்து ரோட்டை போட்டார். இவரது முயற்சியால் பாஜகவுக்கு தமிழக சட்டசபையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு அடுத்து இவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவர்
இதனால் தமிழக பாஜக தலைவராக கே அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், கடும் உழைப்பால் ஐபிஎஸ் படித்தார். இவரது தலைமையில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான பாஜகவினர் வென்றனர். தற்போது இவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம் 25 எம்பிக்களையாவது தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம்.

5 மத்திய அமைச்சர்
அந்த 25 இல் 5 பேராவது மத்திய அமைச்சர்களாவர் என சூளூரைத்துள்ளார். இப்படியாக கட்சியின் நிர்வாகிகள் பாஜகவை கரை சேர்க்க கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் உள்ள தமிழிசைக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன.

தமிழிசைக்கு முக்கிய பதவி
இந்த பதவியில் தமிழரான மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் அலங்கரித்தார். தமிழிசைக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தால் தமிழகத்திலிருந்து முதல்முறையாக தேர்வாகும் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அதே போல் வானதி ஸ்ரீனிவாசனையும் தேசிய அளவுக்கு உயர்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

பாஜக மகளிரணி தலைவி வானதி
தமிழக பாஜக மகளிரணித் தலைவியாக இருக்கும் வானதி, கடந்த 2021 தேர்தலில் கமல்ஹாசனுடன் கடுமையாக போட்டியிட்டு வென்றார். அந்த நேரத்தில் புதிதாக கட்சித் தொடங்கிய கமலிடம் வானதி தோற்றிருந்தால் மிகப் பெரிய கவுரவ பிரச்சினையாகியிருக்கும். ஆனால் வானதி தனது கடும் உழைப்பால் இந்த வெற்றியை தனக்கு உரித்தாகினார்.

அங்கீகாரம்
இதனால் இவரது வெற்றிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இவருக்கு முக்கிய பதவியை கொடுக்கலாம் என தேசிய பாஜக முடிவு செய்துள்ளதாம். அதன்படி மத்திய நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக வானதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த குழுவில் 12 பேர் உள்ளனர். பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள குழுவில் பெண் ஒருவரையும் நியமிக்க தேசிய பாஜக தலைவர் நட்டா கருதுகிறாராம்.
Recommended Video

சுயநலம் பாராமல் உழைக்கும் வானதி
அதன்படி கட்சிக்காகவும் மக்களுக்காகவும் சுயநலம் கருதாமல் உழைத்து வரும் வானதியை நியமிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த குழுவினர்தான் மாநில முதல்வர்களை நியமிப்பது, வேட்பாளர்கள் பட்டியலுக்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்குமாம். எனவே இந்த குழுவில் விரைவில் வானதி இடம்பெறுவார் என தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் முயற்சியாக வானதிக்கு முக்கிய பதவியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications