ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. “இலவச திட்டங்களுக்கு பாஜக, மோடி எதிரி அல்ல” வெகுண்டெழுந்த வானதி சீனிவாசன்!
சென்னை: பிரதமர் மோடியும், பாஜகவும் இலவச திட்டங்களுக்கு எதிரானவர்கள் என்ற முதல்வர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பப் போவதில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். தென் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு இருப்பதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்தார். , எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். அதில், தேர்தல் வெற்றிக்காக குடும்ப, ஊழல் கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் இலவச திட்டங்களை அறிவிப்பது பற்றி தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சலுகை அளிப்பதால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள் கட்டமைப்பு திட்டங்கள் முடங்குவது பற்றியும், அரசு பேருந்து கழகங்களின் கட்டமைப்புகள் சிதைந்து வருவது பற்றியும் பிரதமர் மோடி தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். இதனிடையே, இலவசத் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுகிறார் என 'இந்தியா' கூட்டணி கட்சியினர் திரித்து வருகின்றனர்.
இலவசத் திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல. ஆனால், முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிக்காக, தங்களது குடும்ப ஆட்சியை தக்க வைப்பதற்காக இலவசத் திட்டங்களை அறிவிப்பது நாட்டின் வளர்ச்சியை முடக்கி விடும். பிரதமர் மோடியும், பாஜகவும் இலவச திட்டங்களுக்கு எதிரானது என்ற முதல்வர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பப் போவதில்லை.
மக்கள்தொகை அதிகம் என்பதால் உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோா் தொடா்ந்து இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.
திமுக உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியினரின் உண்மை முகத்தை பிரதமா் மோடி அம்பலப்படுத்தியதும், வட மாநிலங்கள் - தென்மாநிலங்களிடையே பிரிவினையை உருவாக்க பிரதமா் முயல்வதாக முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்டோா் குற்றம்சாட்டி வருகின்றனா். இந்தியா என்பது ஒரு நாடல்ல; மாநிலங்களின் ஒன்றியம் என்று இப்போதும் திமுக பிரிவினையை பேசி வருகிறது. திமுகவின் இந்த பிரிவினை சித்தாந்தத்தை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியும் பேசி வருகிறாா்.
ஹிந்து மதம், ஹிந்தி மொழி, ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, 'இந்தியா' கூட்டணியினரின் பொய்ப் பிரசாரத்தை யாரும் ஏற்கப்போவதில்லை. 'இந்தியா' கூட்டணி படுதோல்வி அடைந்து, பாஜக கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வென்று, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பது உறுதி." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications