வண்டலூர் குழந்தைகள் காப்பகத்தில்.. 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 3 பேர் கைது.. பரபர பின்னணி!
சென்னை: வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர்களின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலியல் தொல்லை தொடர்பாக விடுதி காப்பாளரிடம் சிறுமிகள் புகார் அளித்த போது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் காப்பகத்தை அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கி படித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு படித்து வந்த சிறுமிகளுக்கு அருள்தாஸின் கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
பழனியின் இந்த செயல் தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக சிறுமிகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸிடம் கூறி இருக்கின்றனர். ஆனாலும் கார் ஓட்டுநர் பழனி மீது எந்த நடவடிக்கையையும் அருள்தாஸ் எடுக்கவில்லை. பல்வேறு சிறுமிகளும் புகார் அளித்திருக்கின்றனர். அப்போது அருள்தாஸ் அமைதி காத்து வந்திருக்கிறார்.
சிறுமிகள் புகார்
இந்த நிலையில் குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது கார் ஓட்டுநர் பழனியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் சிலர் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர், உடனடியாக அவர்கள் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
3 பேர் கைது
உடனடியாக குழந்தைகள் காப்பகத்திற்கு வந்த போலீசார், கார் ஓட்டுநர் பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் சிறுமிகள் புகார் அளித்த போது கண்டுகொள்ளாமல் மறைத்த காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரின் மகள் பிரியா ஆகியோரும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
18 சிறுமிகள்
இதனிடையே விசாரணையின் போது அருள்தாஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரியா மற்றும் பழனி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மொத்தமாக பழனியால் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் மொத்தமாக 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். குழந்தைகள் காப்பகத்திலேயே கார் ஓட்டுநர் 18 சிறுமிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் காப்பகத்தில் உள்ள மற்ற குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications