ஆர்ஏசி டிக்கெட் வராது.. குறைந்தபட்ச கட்டணமே எவ்வளவு தெரியுமா? பயணிகளுக்கு ஷாக் தந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அடுத்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில் இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணமே 400 கி.மீ தொலைவுக்கான கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்பார்ம் டிக்கெட் மட்டுமே புக் ஆகும் என்றும் ஆர்.ஏ.சி டிக்கெட் புக் ஆகாது என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இந்த ரயில்களை பொறுத்தவரை முழுவதும் இருக்கை வசதி கொண்டது ஆகும். அதிலும் பகல் நேரத்தில்தான் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொலை தூரங்களுக்கு செல்லும் விதமாக ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இதையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தற்போது ரெடியாக உள்ள நிலையில், கவுகாத்தி - ஹவுரா ரூட்டில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த வாரத்தில் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளார்.
400 கி.மீ தொலைவுக்கான கட்டணம்
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருந்து மேற்கு வங்கத்தில் ஹவ்ரா வரை இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மூலம் பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ரயிலுக்கான குறைந்தபட்ச கட்டணமாகவே 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, ரயில் புறப்படும் ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் எடுத்தாலும் 400 கி.மீ தொலைவுக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஏ.சி டிக்கெட் புக் செய்ய முடியாது
அதேபோல், கன்பார்ம் டிக்கெட் மட்டுமே புக் ஆகும் என்றும் ஆர்.ஏ.சி / வெயிட்டிங் லிஸ்ட் / பகுதியளவு கன்பார்ம் டிக்கெட் ஆகியவை புக் ஆகாது என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக ரயில்களில், வெயிட்டிங் லிஸ்ட்களுக்கு முன்பாக RAC டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் ஆர்.ஏ.சி டிக்கெட் வராது.
டிக்கெட் இருக்கும் வரையில் மட்டுமே புக் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற ரயில்களை போல வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி கோட்டா இருக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை பொறுத்தவரை மணிக்கு 180 கி.மீ வேகம் வரையில் செல்லும் திறன் கொண்டது. அதே நேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக 130 கி.மீ வேகத்தில் மட்டுமே தற்போது ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தற்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 - 90 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அதைவிட சுமார் 40 கி.மீ அதிக வேகத்தில் செல்லும் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications