புல்லட் ரயிலெல்லாம் ஓரம் போ..வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர்! இனி தக்க தைய தையாதான்..இத்தனை வசதிகளா?
சென்னை: ரயில்வே துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய வந்தே பாரத் ரயிலின் அடுத்த பரிணாமமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் தோற்றத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ரயில்வே நவீனமயமாக்கலில் இந்திய ரயில்வே மிகப் பெரிய பாய்ச்சலை எட்டியுள்ள நிலையில், ரயில் விரைவில் கள சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், இது நீண்ட தூர பயணத்தை இனிமையாக மாற்றும் என்கின்றனர் அதிகாரிகள்..
கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. எக்ஸ்பிரஸ் , சதாப்தி ரயில்களை விட வேகம் என்பதோடு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படும்.
அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது கூட மிகவும் வசதியாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் பயணிப்பதாக கூறுகின்றனர் பயணிகள். ஏற்கனவே இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து அதற்கான பணிகளை ரயில்வே தொடங்கியது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் ப்ரோட்டோ டைப் தோற்றத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷணவ் வரும் காலங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதித்த பின் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தயாரிப்பில் இருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்..
நீண்ட தூர பயணம்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நீண்ட மற்றும் நடுத்தர தூர பயணத்திற்காக அதே நேரத்தில், பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள ரயில்களைப் போலல்லாமல், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் அடுத்த கட்ட பயண அணுபவத்தையும், செயல்திறனையும் வழங்கும்.
சிறப்பம்சங்கள்: ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கவாச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு மூலம் ரயில் மோதல்களைத் தடுத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது. மேலும், ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தும் ரிலியபில் பிரேக்கிங் இஞ்சினியரிங் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
பாதுகாப்பு : வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மேம்பட்ட தீ பாதுகாப்பு அமைப்புகள், ஹாஃப்-பெர்மனெண்ட் கப்ளர்கள், ஆண்டி-கிளைம்பர் வடிவமைப்புகள் மூலம் இணைக்கபப்டுவதால் ரயில்வே பணியாளர்களின் பாதுகாப்பு இருப்பதோடு, பயணத்தின் போது பயணிகளுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும்.
அதிக வேகம்: ஸ்லீப்பர் ரயில்கள் அதிக சராசரி வேகம் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வேகமான, அதிக ஆற்றல்மிக்க பயண அனுபவத்தை கொடுப்பதோடு, நீண்ட தூரத்திலும், பயண நேரத்தை குறைக்கிறது.
தற்போதுள்ள வந்தே பாரத் சேவைகள்: டிசம்பர் 2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே 136 வந்தே பாரத் ரயில் சேவைகளை வழங்குகிறது. இவை அனைத்திலும் இருக்க வசதி கொண்ட கோச்சுகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட 16 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது












Click it and Unblock the Notifications