மாட்டுக் கறி பிரியர்களுக்கு இடமில்லையா?.. ஸ்டால் அமையுங்கள்.. தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை
சென்னை: மாட்டுக்கறி பிரியாணிக்கான அரங்கத்தை தமிழக அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் மா.சு.
இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால் இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் பீப் பிரியாணிக்கென அரங்கம் அமைக்கப்படவில்லை என்றார்.

அரசு நடத்தும் திருவிழா
அரசு நடத்தும் உணவுத் திருவிழாக்களில் மாட்டிறைச்சியை தவிர்க்கக் கூடாது என மாநில ஆதிதிராவிடர், பழங்குடி ஆணையம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த மே மாதம் ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அனைத்து பிரியாணி
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து பிரியாணி வகைகளும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறியிருந்தார். இது உணவு தீண்டாமை என தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த புகாரை தொடர்ந்து எஸ்சி- எஸ்டி ஆணையம் இனி வரும் திருவிழாக்களில் மாட்டிறைச்சியை புறக்கணிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னை உணவுத்திருவிழாவில் பீப் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விசிக கேள்வி
இதுகுறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது தொடர் ட்வீட்டுகளில் கூறுகையில் தமிழ்நாடு அரசின் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி அரங்கம் அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் சொல்லுவது சரியா? அப்படி யாரிடம் கேட்கப்பட்டது? உணவு வகைகளில் மாட்டுக்கறி பிரியர்களுக்கு இடமில்லையா? அல்லது மாட்டுக்கறி பிரியாணிக்கு தடையா? விளக்கம் கிடைக்குமா?

வன்னியரசு கோரிக்கை
தமிழ்நாடு உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வைக்க யாரும் விரும்பவில்லை என அதிகாரிகள் சொல்வது ஏற்புடையது அல்ல. அது உண்மையானாலும் அனைத்து மக்களுடைய உணவும் இடம் பெறும் வகையில், அரசாங்கத்தின் சார்பிலேயே மாட்டுக்கறி பிரியாணிக்கான அரங்கத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். @CMOTamilnadu என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications